Saturday 8 September 2012

சி.பி.எஸ்.இ பள்ளிகள் கட்டண விவகாரம் - தீர்ப்பு தள்ளிவைப்பு



கல்விக் கட்டணத்தை அரசு நிர்ணயிக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி, சி.பி.எஸ்.., பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், சென்னை ஐகோர்ட் தள்ளி வைத்துள்ளது.
               சி.பி.எஸ்.., பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார்
பள்ளிகள் நிர்வாக சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குபடுத்தும் சட்டமானது, மாநில பாடத் திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளுக்கு தான் பொருந்தும். சி.பி.எஸ்.., பள்ளிகள், தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வராது. எனவே, கல்விக் கட்டண ஒழுங்குமுறை சட்டமானது, சி.பி.எஸ்.., பள்ளிகளுக்கு பொருந்தாது. அதனால், சி.பி.எஸ்.., பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயிக்க, கல்விக் கட்டண நிர்ணயக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.
                 ஆனால், அதிகாரவரம்பை மீறி, சி.பி.எஸ்.., பள்ளிகள் சிலவற்றுக்கு கட்டணத்தை குழு நிர்ணயித்துள்ளது. சி.பி.எஸ்.., பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கவோ, அதை அமல்படுத்தவோ தடை விதிக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது. இதுபோன்று, சி.பி.எஸ்.., பள்ளிகள் தரப்பிலும் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தமிழக அரசின் சட்டம், சி.பி.எஸ்.., பள்ளிகளுக்கும் பொருந்தும் எனக் கூறி, பெற்றோர் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுக்களை, நீதிபதிகள் பானுமதி, சுப்பையா அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்" விசாரித்தது. பள்ளிகள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.சந்திரன், சோமயாஜி, முத்துகுமாரசாமி, சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சுந்தரேசன், பெற்றோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், அரசு தரப்பில் அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி ஆஜராகினர்.
                   அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்த, தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இந்தச் சட்டப் பிரிவுகள் அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும். அந்தப் பள்ளிகள் மாநில பாடத் திட்டத்தை பின்பற்றினாலும் சரி, வேறு எந்த போர்டின் பாடத் திட்டத்தை பின்பற்றினாலும் சரி. சி.பி.எஸ்.., பள்ளிகளாக இருந்தாலும், அதை துவங்க வேண்டும் என்றால், மாநில அரசின் அனுமதி பெறப்பட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இவ்வழக்கின் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், "டிவிஷன் பெஞ்ச்" தள்ளிவைத்தது.

No comments:

Post a Comment