Monday 21 January 2013

கல்வித்துறை அதிகாரிகளை கண்டித்து சிறப்பு ஆசிரியர்கள் பிப்., 4ல் பேரணி



                 முதல்வர் உத்தரவை அமல்படுத்தாத கல்வித்துறை அதிகாரிகளை கண்டித்து, சிறப்பு ஆசிரியர்கள் சென்னையில், பிப்ரவரி, 4ல் கவன ஈர்ப்பு பேரணி நடத்த உள்ளனர்.இது குறித்து தமிழக அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பணி ஓய்வு இடைநிலை
மற்றும் சிறப்பு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திருமலைசாமி, பொதுச்செயலாளர் மாணிக்கம், பொருளாளர் சேதுபதி ஆகியோர் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது : இடைநிலை பயிற்சி பெற்ற துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி பணி ஓய்வு இடைநிலை மற்றும் சிறப்பு ஆசிரியர்கள், ஒரே கல்வி தகுதியுடன், ஒரே நேரம் பணிக்கு வந்தோம். 1.6.88 வரை ஒரே மாதிரியான சம்பளம் பெற்றோம்.ஐந்தாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர் பதவி இருந்ததால், கூடுதல் சம்பளம் பெற்றனர். இதுபோல உயர், மேல்நிலைப்பள்ளி இடைநிலை சிறப்பு ஆசிரியர்களுக்கும், அவர்களுக்கு இணையான சம்பளம் கோரி தமிழக அரசிடம் முறையிட்டோம்.அதன்பேரில், 1999ம் ஆண்டு மார்ச், 22ம் தேதி, இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இன்று வரை அந்த உத்தரவை கல்வித்துறை அமல்படுத்தவில்லை. இதனால், பத்தாயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.
                                              
எங்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத்தொகை, கூடுதல் பென்ஷன் போன்ற பணப்பலன் கிடைக்கவில்லை. அதிகாரிகள் முதல்வரின் உத்தரவை அமல்படுத்தாமல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர்.உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் உள்ளனர். தற்போது மீண்டும் பதவியேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா, கல்வித்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.எனவே, எங்களது கோரிக்கையை நிறைவேற்றக்கோரி, ஃபிப்ரவரி, 4ம் தேதி சென்னையில் கவன ஈர்ப்பு பேரணி நடத்துகிறோம். இதில், ஆயிரம் ஆசிரியர் பங்கேற்க உள்ளனர். சென்னை, ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து பேரணி துவங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.மண்டல தலைவர் ரங்கசாமி, சிதம்பரம், சுந்தர்ராஜ், அரங்கசாமி ஆகியோர் உடனிருந்தனர்
.

No comments:

Post a Comment