பட்டதாரி ஆசிரியர்கள் எம்ஏ, எம்எஸ்சி முடித்தால் முதல் ஊக்க ஊதிய உயர்வும், எம்எட் முடித்தால் 2வது ஊக்க ஊதிய உயர்வும் அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் தொலைதூரக் கல்வியில் எம்எட் படிப்பை பல்கலைக்கழகங்கள் நிறுத்தின. இதனால் பெரும்பாலான பட்டதாரி ஆசிரியர்கள் எம்பில், பிஎச்டி போன்ற பட்டப்
படிப்புகளை படித்தனர். இதையடுத்து, எம்எட் படிப்பை போல் எம்பில். பிஎச்டி முடித்திருந்தாலும் 2வது ஊக்க ஊதிய உயர்வு அளிக்கலாம் என கடந்த ஜனவரி 18ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது. தமிழாசிரியர்களில் சிலர் பிஎட் படிக்காமல், நேரடியாக பிலிட் தமிழ் முடித்துள்ளனர். அவர்களில் எம்ஏ முடித்தவர்களுக்கு முதல் ஊக்க ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அரசாணைப்படி எம்பில், பிஎச்டி முடித்த தமிழாசிரியர்கள் 2வது ஊக்க ஊதிய உயர்வு கேட்டு கல்வித்துறைக்கு விண்ணப்பித்தனர். ஆனால், பி.எட் படித்திருந்தால் மட்டுமே 2வது ஊக்க ஊதிய உயர்வு அளிக்க முடியும் என கூறி, தமிழாசிரியர்களின் விண்ணப்பங்களை ஏற்க கல்வித்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனால் தமிழாசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து தமிழாசிரியர் ஒருவர் கூறுகையில், கல்வித்துறை அதிகாரிகள் தேவையில்லாமல் பிஎட் படித்தால் மட்டுமே 2வது ஊக்க ஊதிய உயர்வு அளிக்க முடியும் என்று கூறுகின்றனர். இதனால் பி.லிட் படித்த தமிழாசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கல்வித்துறை அதிகாரிகள் அரசிடம் தெளிவான விளக்கம் பெற்று 2வது ஊக்க ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment