Friday 21 June 2013

ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர், அதிகாரிகள் ஆலோசனை



                 பள்ளி கல்வித்துறையில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை அறியவும், அவற்றுக்கு தீர்வு காணவும், பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன், நேற்று, ஆலோசனை
நடத்தினார். பாடநூல் கழக அலுவலகத்தில், நேற்று மாலை, 4:00 மணியில் இருந்து, ஒவ்வொரு சங்க நிர்வாகிகளையும் அழைத்து, அவர்களின் பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகளை, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கேட்டறிந்தனர். அப்போது, சங்க நிர்வாகிகள், கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுச்செயலர், சாமி சத்தியமூர்த்தி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர், பேட்ரிக் ரைமாண்ட், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் சங்க தலைவர், ரவிச்சந்திரன், பொதுச்செயலர், தேவி செல்வம் மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து, கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
                         
உடற்கல்வி ஆசிரியர் சங்கம் சார்பில், விளையாட்டுக்கென, தனி இணை இயக்குனர் நியமிக்க வேண்டும், ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், தலா, ஒரு உடற்கல்வி ஆசிரியர், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், கிரேடு-1 உடற்கல்வி இயக்குனர்கள், கிரேடு-2 உடற்கல்வி இயக்குனர்கள் நியமனம், உடற்கல்விக்கு பாடப்புத்தகம் என, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தலைமை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலர், சாமி சத்தியமூர்த்தி கூறுகையில், "மாவட்ட கல்வி அலுவலர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், 14 வகையான இலவச பொருட்களை மாணவர்களுக்கு வழங்கும் பணியை கவனிக்க, தனி ஊழியர் நியமனம், நிலுவையில் உள்ள சிறப்புக் கட்டணத்தை, உடனடியாக வழங்க கோருதல், கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளோம். முதல்வருடன், ஆலோசனை நடத்தி, முடிவை எடுப்பதாக, அமைச்சர் தெரிவித்தார்" என்றார்
.

No comments:

Post a Comment