Saturday 13 July 2013

1098 - இது குழந்தைகளுக்காக... யுவகிருஷ்ணா


                குழந்தைகளுக்கு உதவும் 1098 எண் இந்தியாவில் ரொம்ப பிரபலம். 17 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3 கோடி அழைப்புகள் இந்த எண்ணுக்கு வந்திருக்கின்றன. உதவியோ, ஆலோசனையோ தேவைப்படும் குழந்தைகள்
கண்ணை மூடிக்கொண்டு இந்த எண்ணுக்கு போன் செய்யலாம். ஒரு குழந்தைக்கு உதவ நினைக்கும் யாராக இருந்தாலும் இந்த எண்ணை அழைக்கலாம். இச்சேவையின் மூலம் இதுவரை சுமார் 30 லட்சம் குழந்தைகளுக்கு உதவியிருக்கிறது சைல்ட் லைன் அமைப்பு. தெருவோர அனாதரவான குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள், வீடுகளில் கொடுமைப்படுத்தப்படும் குழந்தைகள், பள்ளிகளில் குழந்தைகள் மீது பிரயோகிக்கப்படும் உடல் ரீதியான / பாலியல் ரீதியான தாக்குதல்கள், குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான ஆதரவும் வழிகாட்டுதலும், பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகள், மனித வியாபாரத்தில் மாட்டிக்கொள்ளும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், வீட்டை விட்டு ஓடிப்போகும் குழந்தைகள், மாற்றுத் திறனாளி குழந்தைகள், எச்..வி. பாதிக்கப்பட்ட குழந்தைகள் என்று குழந்தைகள் தொடர்பான ஏராளமான தளங்களில் நடைபெறும் பிரச்சினைகளுக்கு 1098 தீர்வளிக்க முயற்சிக்கிறது.
                                 
குழந்தைகளுக்கான உரிமையும், பாதுகாப்பும்தான் சைல்ட் லைன் அமைப்பின் நோக்கம். 1098-க்கு போன் செய்தால் வீணாகும் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று அனாதரவான குழந்தைகளுக்கு விநியோகிக்கிறார்கள் என்று சமீப காலமாக இணையதளங்களில் ஒரு செய்தி பரப்பப்படுகிறது. இந்தப் பொய்யான தகவலை நம்பி நிறைய பேர் 1098- தொடர்புகொண்டு  பேசுகிறார்கள்.
இதனால் அவர்களது வழக்கமான பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே அந்தச் செய்தி முற்றிலும் தவறானது, அதை நம்ப வேண்டாம் என்கிறது இந்த அமைப்பு.


நன்றி : புதிய தலைமுறை கல்வி 

No comments:

Post a Comment