ஆசிரியர் கல்வி டிப்ளமோ படிப்புக்கு மிக மிக குறைவாகவே மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளதால், கவுன்சலிங்குக்கு வருபவர்களுக்கு அரசு நிறுவத்னத்திலேயே வாய்ப்பு கிடைப்பதால், தனியார் ஆசிரியர் பயிற்சி
பள்ளிகளில் மாணவர்கள் யாரும் சேர முன்வரவில்லை. தமிழகத்தில் அரசு பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, பாடம் நடத்த, இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கு, பிளஸ் 2 முடித்து, ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் சுயநிதி பள்ளிகள் ஏராளமாக துவங்கியதால், ஆண்டுக்கு, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் உருவாக்கப்பட்டனர். தற்போது, ஏராளமானோர் ஆசிரியர் கல்வி டிப்ளமோ படித்து விட்டு, வேலைக்காக காத்திருக்கும் நிலையில், இதற்கான மவுசு குறைந்துள்ளது. இதனால் இதில் சேர மாணவர்கள் முன்வருவதில்லை. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஒரு அரசு ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, இரண்டு உதவி பெறும் பள்ளிகள், ஒன்பது சுயநிதி பள்ளிகள் என உள்ளன.இவற்றில் அரசு நிறுவனங்களில், 100 சதவிகித சீட்களும், சுயநிதி பள்ளிகளில் 50 சதவிகித சீட்களும், கவுன்சலிங் மூலம் நிரப்பப்படுகிறது. கடந்த ஆண்டு வரை, மாநில அளவில் ஒரு இடத்தில் மட்டும் கவுன்சலிங் நடத்தப்பட்டது. நடப்பாண்டில், அந்தந்த மாவட்டங்களில், ஆன்லைன் மூலம் கவுன்சலிங் நடத்த உத்தரவிடப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 112 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான கவுன்சிலிங், சேலம் டயட் முதல்வர் டோமினிக் ஸ்தனிலாஸ் தலைமையில், சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 15ம் தேதி வரை நடக்கிறது. நேற்று தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கையில், 10 பேர் கலந்து கொண்டனர். மிகக்குறைந்த எண்ணிக்கையில் கவுன்சலிங்கில் மாணவர்கள் கலந்து கொள்வதால், அனைவருக்கும் அரசு நிறுவனங்களிலேயே வாய்ப்பு கிடைத்துவிட்டது. இதனால் சுயநிதி கல்லூரிகளை இதுவரை ஒருவர் கூட தேர்ந்தெடுக்கவில்லை. மாணவர்களிடையே ஆர்வம் இல்லாததால், சில ஆண்டுகளுக்கு முன் 36 சுயநிதி பள்ளிகள் இருந்த நிலை மாறி, தற்போது எட்டாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment