Friday 12 July 2013

பட்டதாரி ஆசிரியர்களுக்கு கட்டாய பணிமாற்றம்: பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கடும் அதிருப்தி - தினமலர்


                அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட நிதி, விரயமாவதை தடுக்க, 3,500க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு கட்டாய பணிமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களிடையே கடும் அதிருப்தி
நிலவுகிறது. தமிழகத்தில், ஒன்பது மற்றும், பத்தாம் வகுப்பு கல்வித்தரத்தை மேம்படுத்த மத்திய அரசின் நிதியுதவியுடன், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் புதிய உயர்நிலைப்பள்ளிகள் துவக்கப்பட்டு, ஆசிரியர்களும் நியமிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, ஏற்கனவே செயல்பட்டு வரும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும், கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்களும் இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது.
                              இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட பட்ஜெட்டில், 6,800 ஆசிரியர் பணியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில், 3,500க்கும் மேற்பட்ட பணியிடம் காலியாகவே உள்ளன. இப்பணியிட ஆசிரியர்களின் சம்பளத்துக்கு என இத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி(பி.சி., ஹெட்), செலவிடப்படாமல் அப்படியே உள்ளது. இத்திட்டத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும், செலவிடப்படாத நிதியினை மத்திய அரசுக்கு திரும்ப செலுத்த வேண்டியிருக்கும். இதை தடுக்க, தற்போது, "பி.சி.,' தலைப்பில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை, ஏற்கனவே அரசு பள்ளிகளில், தமிழக அரசின் நிதியில், "..,' தலைப்பில் சம்பளம் பெறும் ஆசிரியர்களை பணிமாறுதல் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதனால் தமிழக அரசின் பணியிடங்கள் காலிப்பணியிடமாக காட்டப்படும்.
                            ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு, கட்டாயமாக பணிமாறுதல் செய்தால், கடும் எதிர்ப்பு உருவாகும் என்பதை கருத்தில் கொண்டு, மாறுதல் வழங்கிய ஆசிரியருக்கு, பணிபுரிந்த பள்ளியிலேயே மாற்றுப்பணியில் ஈடுபடுத்திக்கொள்ள உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக, சேலம் பள்ளியில், .., தலைப்பில் பணிபுரியும் ஆசிரியருக்கு, ஆட்டையாம்பட்டியில், "பி.சி.,' தலைப்பில் உள்ள பணியிடத்துக்கு மாறுதல் உத்தரவும், மீண்டும் சேலம் பள்ளியிலேயே மாற்றுப்பணியில் பணிபுரிய உத்தரவும் வழங்கப்பட்டது. இதனால் அந்த ஆசிரியருக்கு, பணி பதிவேடு, சம்பளம் உள்ளிட்டவை ஆட்டையாம்பட்டி பள்ளியில் தயார் செய்யப்படும். ஆனால், அவர் சேலம் பள்ளியில் பணிபுரிய வேண்டியிருக்கும். இந்த கட்டாய பணிமாற்றம் ஆசிரியர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

                                  இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: இப்பணியிட மாற்றத்தால், அதே பள்ளியில் ஆசிரியர்கள் பணிபுரிந்தாலும், அவர்களின் பல உரிமைகள் பறிக்கப்படுகிறது. மாற்றுப்பணியில் பணிபுரியும் ஆசிரியர்களை அப்பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட யாரும் கண்டுகொள்வதில்லை. மேலும் ஒவ்வொன்றுக்கும், தாங்கள் பணிப்பதிவேடு பராமரிக்கும் பள்ளிக்கு செல்ல வேண்டியிருக்கும். பணிமாறுதல் வழங்கப்பட்டதால், ஏற்கனவே இருந்து வரும், சீனியாரிட்டியும் போய்விடும். இதனால் இந்த ஆசிரியர்களிடையே கற்பித்தல் திறனும், ஆர்வமும் குறைய வாய்ப்புள்ளது. பத்தாம் வகுப்புக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களை, இதுபோன்று, அல்லாட வைப்பதால், தேர்வு முடிவுகளிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு பதில், பணிபுரியும் பள்ளியிலேயே, பி.சி., ஹெட் உருவாக்கி, அதில் ஆசிரியர்களை மாறுதல் செய்யலாம். இல்லாவிட்டால், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கலாம். இதனால் ஏராளமான ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment