Thursday 11 July 2013

தலைமை ஆசிரியர்கள் ஓய்வில் சிக்கல்: நிதி இழப்பை ஈடுகட்ட வேண்டும்



                 தலைமை ஆசிரியர்கள் ஓய்வு பெறும் முன், அவர்கள் பணியாற்றிய அனைத்து பள்ளிகளிலும், நிதி இழப்பு இருந்தால், அதை சரி செய்ய வேண்டும். இல்லை எனில், அவர் ஓய்வூதியம் பெறுவதற்கு பரிந்துரை செய்த, மாவட்ட
கல்வி அலுவலர்களே, முழு பொறுப்பாவார்கள், என பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படும், அனைத்து பள்ளிகளிலும், அரசு மற்றும் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட வேண்டிய தொகை, சிறப்பு கட்டணம், வரவு - செலவு கணக்குகள் பராமரித்தல், முறையாக இல்லை, என புகார் வந்ததால், கடும் நிபந்தனைகளை, பள்ளி கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
                             
அதன்படி, பள்ளிகளில் ஏப்., 1 முதல், அடுத்த ஆண்டு மார்ச் 31 க்குள், மேற்கொள்ளப்பட வேண்டிய செலவினங்கள் சார்பாக, வரவு- செலவு திட்டம் தயாரித்தல் வேண்டும். அப்போது,மேற்கொள்ளப்பட வேண்டிய தொகை, அதிகப்படியாக மிகாமல் தயாரித்திட வேண்டும். வங்கி வட்டித்தொகை முழுவதும், அவ்வப்பொழுது அரசு கணக்கில் செலுத்தப்பட வேண்டும். பள்ளியில் பதவி ஏற்கும் புதிய தலைமை ஆசிரியர், முந்தைய தொகை, அரசு, பள்ளி கணக்கில், முந்தைய தலைமை ஆசிரியரால் செலுத்தப்படாமல் உள்ளதா? என கண்டறிந்து, அதனை சரி செய்ய நடவடிக்கை எடுத்திட வேண்டும். முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், ஓய்வு பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஓய்வூதிய அறிக்கையை, மாநில கணக்காயருக்கு பரிந்துரைக்கும் முன்னர், அவர்கள் தலைமை ஆசிரியர்களாக பணிபுரிந்த அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர்களாக பணி புரிந்த காலங்களில், நிதி இழப்பு ஏதும் இல்லை, என்பதை உறுதி செய்த பின்னரே, ஓய்வூதிய கருத்துருவை பரிந்துரை செய்ய வேண்டும். பின்னொரு காலங்களில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், பொறுப்பு தலைமை ஆசிரியர் சார்பாக, நிதி இழப்பு கண்டறியப்பட்டால், அந்த தலைமை ஆசிரியரின் ஓய்வூதிய அறிக்கையை பரிந்துரை செய்த, முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலரே முழுப் பொறுப்பாவார், என பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது
.

No comments:

Post a Comment