Wednesday 17 July 2013

உதவி பேராசிரியர் பணிக்கான அனுபவம்: டி.ஆர்.பி., தெளிவுபடுத்த உத்தரவு


                     "அரசோ, பல்கலைக்கழகமோ நிர்ணயித்தபடி, பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) விதிமுறைகளின் படி, பணி நியமனத்தின் போது, கல்வித் தகுதியை ஒரு ஆசிரியர் பெற்றிருந்தால், பணி அனுபவத்தை நிர்ணயிக்க,
அதை அளவுகோலாக கொள்ள வேண்டும்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர்களுக்கான, 1,093 காலியிடங்களை நிரப்புவதற்கு, விண்ணப்பங்களை வரவேற்று, ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த, மே மாதம், அறிவிப்பாணை வெளியிட்டது. அதன்படி, முதுகலை பட்டத்தில், 55 சதவீதம் மதிப்பெண், மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வு (ஸ்லெட்) அல்லது தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அல்லது பி.எச்.டி., பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் தொடர்பாக, பிறப்பித்த உத்தரவில், "ஸ்லெட்" அல்லது "நெட்" அல்லது "பி.எச்.டி.," தகுதி பெற்ற பின், உள்ள பணி அனுபவம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும், என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

                               இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், சந்திரசேகரன் என்பவர், தாக்கல் செய்த மனு: தனியார் கல்லூரி ஒன்றில், 1986ல், விரிவுரையாளராக பணியில் சேர்ந்தேன். அப்போது, வணிகவியலில் முதுகலை பட்டம் பெற்றிருந்தேன். அதன்பின், 1990ல், எம்.பில்., பட்டம் பெற்றேன்; 2011ல், பி.எச்.டி., பட்டம் பெற்றேன். 1986ல், பணியில் சேரும்போது, உதவிப் பேராசிரியர் பணிக்கு, "ஸ்லெட்" அல்லது "நெட்" அல்லது "பி.எச்.டி.," தகுதியாக இல்லை. பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளின்படி, பணிக்கான கல்வித் தகுதியை, பல்கலைக்கழகம் அனுமதித்துள்ளபடி, நான் நியமிக்கப்பட்டேன். எனவே, என் பணி அனுபவத்தை, 1986ம் ஆண்டு முதல், கணக்கில் கொள்ள வேண்டும். பணி அனுபவம் தொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, நீதிபதி அரிபரந்தாமன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் பி.ரவி, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி ஆஜராகினர்.
                         
நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: தவறை உணர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரியம், ஏற்கனவே பிறப்பித்த திருத்த அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளது. எனவே, பணி அனுபவம் தொடர்பாக, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இரண்டு திருத்தங்கள் போய் விட்டன. ஆனாலும், பணி அனுபவத்தை நிர்ணயிக்க, எந்த வழிமுறைகளும் கொடுக்கப்படவில்லை. அரசு அல்லது பல்கலைக்கழகம் நிர்ணயித்துள்ளபடி, யு.ஜி.சி., விதிமுறைகளின்படி, கல்வித் தகுதியை ஒரு ஆசிரியர் பெற்றிருந்தால், அதையே ஆசிரியர் பணி அனுபவத்திற்கு, அளவுகோலாக கொள்ள வேண்டும். எனவே, குறிப்பிட்ட கால கட்டத்தில், அப்போது இருந்த கல்வித் தகுதியை, ஆசிரியர் பணிக்கான அனுபவத்திற்கு, மதிப்பெண் வழங்க பரிசீலிக்க வேண்டும். இதுதொடர்பாக, பத்திரிகைகள் மூலம், தெளிவான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும். இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்
.

No comments:

Post a Comment