Wednesday 17 July 2013

கலந்தாய்வை யார் நடத்துவது? என்று போட்டா போட்டி பி.எட். மாணவர் சேர்க்கை தாமதம் ஆவதால் மாணவர்கள் தவிப்பு:



                பி.எட். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை யார் நடத்துவது? என்று கல்லூரி கல்வி இயக்ககத்திற்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள போட்டா
போட்டியால் மாணவமாணவிகள் பரிதவிக்கிறார்கள்.
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்
                               
தமிழ்நாட்டில் பி.எட். மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு இந்த மாத தொடக்கத்திலேயே வந்திருக்க வேண்டும். கடந்த வாரம்தான் நடப்பு கல்வி ஆண்டுக்கான சேர்க்கை வழிகாட்டி நெறிமுறைகளே வெளியிடப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் பி.எட். மாணவர் சேர்க்கையை கல்லூரி கல்வி இயக்ககமே மேற்கொள்ளும். கல்லூரி கல்வி இயக்கம் சார்பில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் கலந்தாய்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்யும்.இந்த நிலையில், எப்படி என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறதோ அதேபோல் பி.எட். கலந்தாய்வை நடத்தும் பொறுப்பை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உயர்கல்வித்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
போட்டா போட்டி
                            
எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கலந்தாய்வை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் நடத்தாமல் மருத்துவக் கல்வி இயக்குனரகம் நடத்துவதை சுட்டிக் காட்டிய கல்லூரி கல்வி இயக்ககம், எப்போதும் போல் பி.எட். கலந்தாய்வை நடத்தும் பொறுப்பை தங்களிடம் விட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறது.தொடர்ந்து பல ஆண்டுகளாக கல்லூரி கல்வி இயக்ககமே பி.எட். கலந்தாய்வை நடத்தி வருவதால் இந்த ஆண்டும் அதை நடைமுறையை பின்பற்றுவது என்று உயர்கல்வித்துறை திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில், பி.எட். கலந்தாய்வை யார் நடத்துவது? என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கும், கல்லூரி கல்வி இயக்ககத்திற்கும் இடையே போட்டோ போட்டி ஏற்பட்டு இருப்பதால் பாதிக்கப்பட்டு இருப்பது மாணவமாணவிகள்தான். பி.எட். மாணவர் சேர்க்கை அறிவிப்பு தாமதம் ஆகிவருவதால் அவர்கள் பரிதவித்து கொண்டிருக்கிறார்கள்.
அதிக கல்வி கட்டணம் வசூல்
                
அதேநேரத்தில், கிட்ட தட்ட அனைத்து தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளும் பி.எட். மாணவர் சேர்க்கையை முடிந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் கல்லூரிகள் பி.எட். படிப்புக்கு கல்வி கட்டணமாக ரூ.47,500 வசூலித்துக் கொள்ளலாம் என்று நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் கமிட்டி அறிவித்தது. ஆனால் பல தனியார் கல்வியியல் கல்லூரிகளில் அதற்கு மேலாக ரூ.70 ஆயிரம், 80 ஆயிரம், ரூ.1 லட்சம் என்று வசூலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
.

No comments:

Post a Comment