Friday 18 October 2013

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க முடியாது


                       ''தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க முடியாது'' என்று மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் பிச்சை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகங்களுக்கு
அனுப்பியுள்ள விபரம்: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் பிரிவு 18(5)ன்படி எந்த ஒரு பள்ளியும் அங்கீகாரம் இன்றி செயல்படக் கூடாது. அங்கீகாரம் காலாவதியான நாளில் இருந்து அபராதம் ரூ.ஒரு லட்சம் மற்றும் பள்ளி செயல்பட்ட ஒவ்வொரு நாளுக்கும் நாள் ஒன்றிற்கு ரூ.10 ஆயிரம் வீதமும் சேர்த்து மொத்தமாக அபராதம் விதிக்கப்படும். 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத பள்ளி தொடர் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை அதிகபட்சமாக ஒரு பிரிவில் 30 மாணவர்களும், 6 முதல் 8ம் வகுப்புகளில் ஒரு பிரிவில் 35 மாணவர்களும் மட்டுமே சேர்க்க வேண்டும். 9 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் விதித் தொகுப்பு விதி எண் 14ன்படி ஒரு பிரிவில் 50 மாணவர்கள் வரை சேர்க்கலாம்.

                      ஒரு வகுப்பிற்கு 4 பிரிவுகள் மட்டுமே இருக்க வேண்டும். ஐந்தாம் பிரிவு துவங்க மெட்ரிக் பள்ளி ஆய்வாளரிடம் அனுமதி பெற வேண்டும். ஐந்து பிரிவுகளுக்கு மேல் தொடங்கவோ, செயல்படவோ அனுமதி இல்லை. முறையான பிறப்புச் சான்றிதழ் அளிக்காத காரணத்தினால் சேர்க்கை மறுக்கக் கூடாது. 8ம் வகுப்பு வரை மாணவர்களை தேக்கம் செய்யவோ, பள்ளியில் இருந்து வெளியேற்றவோ கூடாது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை 2016 ஏப்ரல் 1ம் தேதிக்குப்பிறகு மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க முடியாது. 100 சதவீத தேர்ச்சியினைக் கருத்தில்கொண்டு கற்றலில் பின்தங்கிய மாணவர்களை 9 மற்றும் 11ம் வகுப்புகளில் கட்டாயப்படுத்தி தேக்கமடைய வைக்கக் கூடாது. அவர்களுக்கு சிறப்புப்பயிற்சி அளித்து அவர்களும் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும். 10, 12ம் வகுப்பு மாணவர்களை எக்காரணம் கொண்டும் தனித்தேர்வர்கள் என விண்ணப்பித்து தேர்வு எழுத வற்புறுத்தக் கூடாது. அதிகளவில் வீட்டுப்பாடம் மற்றும் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்படுவதாக புகார் வருகிறது. வீட்டுப்பாடங்கள் மற்றும் வகுப்புத் தேர்வுகள் நாள் ஒன்றிற்கு ஒரு பாடம் வீதம் சுழற்சி முறையில் முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment