Wednesday 9 October 2013

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதிய அனைத்துத் தேர்வர்களின் மதிப்பெண்களையும் சக தேர்வர்கள் பார்வையிடும் வசதி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது


            போட்டித் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் வகையில் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்களை மொத்தமாக வெளியிட முடிவு செய்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஏற்கெனவே உள்ள நடைமுறையின்படி, ஆசிரியர் தேர்வு வாரிய
இணையதளத்தில் வரிசை எண்ணை பதிவு செய்தால் அந்தக் குறிப்பிட்ட தேர்வரின் முடிவை மட்டுமே பார்வையிட முடியும்புதிதாக அறிமுகம் செய்ய உள்ள முறையின்படி, தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தங்களது வரிசை எண்ணை பதிவு செய்தால் தங்களது பாடங்களில் தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்ணையும் பார்வையிடலாம். இதையடுத்து, ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள், அவர்களின் போட்டித் தேர்வு மதிப்பெண் விவரங்கள், அவர்களின் தேர்வு சரியாக நடைபெற்றுள்ளதா போன்றவற்றை தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம்.
                       பாடவாரியான மதிப்பெண் விவரங்கள் 700 பக்கங்களுக்கும் அதிகமாக உள்ளதால், இதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஓரிரு நாள்கள் ஆகும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பெரும்பாலும் இந்த மதிப்பெண் விவரம் புதன் அல்லது வியாழக்கிழமை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ம் தேதி நடைபெற்றது. தமிழ் தவிர பிற பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை இரவு (அக்.7) வெளியிடப்பட்டன. தேர்வுப் பட்டியல் எப்போது? முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுபவர்களின் பட்டியல் இந்த வாரத்தில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.
                  சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு, அக்டோபர் மாதத்துக்குள் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தேர்வர்கள் வரவில்லை: வழக்கமாக, ஒவ்வொரு தேர்வு முடிவையும் வெளியிடும்போது மறுநாள் ஏராளமான தேர்வர்கள் பல்வேறு சந்தேகங்கள் மற்றும் புகார்களோடு சென்னை டி.பி.. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு வருவார்கள். ஆனால், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்ட நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு செவ்வாய்க்கிழமை ஓரிரு தொலைபேசி அழைப்புகளைத் தவிர தேர்வர்கள் நேரில் வரவில்லை.

                          இந்தத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்னதாக 4 முறை பல்வேறு நிலைகளில் அந்த முடிவுகள் சரிபார்க்கப்பட்டன. நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இறுதிசெய்யப்பட்ட சரியான விடைகளும் தேர்வு முடிவுகளோடு வெளியிடப்பட்டதால் யாருக்கும் இதில் சந்தேகம் இல்லாமல் இருந்திருக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தேர்வு முடிவுகளை பார்வையிடும் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில், தேர்வு வாரியத்துக்கு வரும் தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அங்கேயே சரிபார்த்துச் செல்லலாம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment