Wednesday, 3 October 2012

ஊரக திறனாய்வு தேர்வு: மீண்டும் நடத்த ஆசிரியர்கள் வலியுறுத்தல்



       ஊரக திறனாய்வு தேர்வில், பழைய பாடத்திட்டப்படி கேள்விகள் கேட்கப்பட்டதால், தகுதியுள்ள மாணவர்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறும் ஆசிரியர்கள், மறுதேர்வு நடத்த வலியுறுத்தியுள்ளனர். எட்டாம் வகுப்புக்கு தேர்வாகிய மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படும் ஊரக
திறனாய்வு தேர்வு, கடந்த செப்டம்பர் 23ம் தேதி நடந்தது. மனதிறன் பகுதி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
                    தமிழகம் முழுவதும் இந்த தேர்வை 50 ஆயிரம் கிராமப்புற மாணவர்கள் எழுதினர். இத்தேர்வில், சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்கப்படாமல், 20101 பழைய பாடத்திட்டப்படி கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. தாங்கள் படிக்காத பாடங்களில் இருந்து கேள்விகள் வந்திருந்ததால், மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு உத்தேசமாக பதில் அளித்துள்ளனர். இதனால் மாணவர்களும், அவர்களை தேர்வுக்கு தயார்படுத்திய ஆசிரியர்களும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
                       இந்த தேர்வின் மூலம் தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது பாதிக்கப்படும். எனவே, இத்தேர்வை ரத்துசெய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும் என அரசுக்கு, மாணவர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment