ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் 9ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கியது. இந்த புத்தகத் திருவிழாவை உச்சநீதிமன்ற நீதிபதி பி.சதாசிவம் தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த விழாவில் அவர்
பேசுகையில், 3 மாதங்களுக்கு முன்பு என்னை டெல்லியில் உள்ள வீட்டில், மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் சந்தித்து, புத்தக திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் உச்சநீதிமன்றத்தில் பதவியேற்றவுடன் ஈரோட்டுக்கு வரும்போது விழாவில் கலந்துகொள்வதாக சொல்லியிருந்தேன். அதன்படி பிறகு நானாக ஸ்டாலின் குணசேகரனுக்கு போன் செய்து, இன்றைய தினத்தில் கலந்து கொள்வதாக உறுதி அளித்தேன்.
இந்த புத்தக கண்காட்சியை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இதுபோன்ற விழாக்களில் கலந்துகொண்ட அனுபவம் இல்லை. நீதிமன்ற விழாக்களில்தான் கலந்துகொண்டிருக்கிறேன். இன்று அனைத்து ஸ்டால்களிலும் அழைத்துச் சென்று காட்டினார்கள். நான் இங்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலோ, ஒரு வீட்டிற்கு சென்றாலோ பூச்செண்டு கொடுக்கிறார்கள். சால்வை அணிவிக்கிறார்கள். விலை உயர்ந்த பொருட்களை கொடுக்கிறார்கள். அதற்கு பதிலாக ஒரு சிறந்த நூலை அளிக்கலாம். இன்றும் நமது சென்னை உயர்நீதிமன்றத்தில், உச்சநீதிமன்ற நீதிபதிகளையோ, நல்ல பேச்சார்களையோ அழைத்தால், அவர்களுக்கு விழா முடிவில் நல்ல விலை உயர்ந்த சட்ட சம்பந்தமாக, பொது அறிவு சம்மந்தமாக உள்ள நூல்களை கொடுக்கிறார்கள். இது எனக்கு நல்ல விஷயமாக தோன்றுகிறது. திருமண நிகழ்ச்சிகளில் திருக்குறள் நூல்களை கொடுக்கலாம்.
இந்தப் புத்தகக் கண்காட்சி மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என்று, ஸ்டாலின் குணசேகரன் பேசும்போது சொன்னார். மேலும் ஆசிரியர்களை பாராட்டி பேசினார். அவர், ஆசிரியர்களை பாராட்டி பேசும்போது எனக்கு நினைவுக்கு வருவது என்னவென்றால், உயர்பதவி கிடைத்தவுடன் எங்கள் ஊரில் நான் படித்த பள்ளி, பின்னர் கல்லூரிக்கு சென்றேன். அங்கு நான் படித்தபோது இருந்த ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்று சென்றுவிட்டார்கள். நேற்று சொந்த ஊருக்கு வந்தபோது, நான் படித்த பள்ளியில் ஆசிரியராக இருந்த விஸ்வநாதன் என்பவர் என்னை சந்தித்தார். எத்தனையோ பேர் நேற்றும் இன்றும் என்னை சந்தித்ததாலும், எனது ஆசிரியரை நான் சந்தித்தப்போது, நான் மிகவும் பெருமைப்பட்டேன். நான் கல்லூரியில் படிக்கும்போது, எனக்கு தமிழ் பேராசிரியராக இருந்தவருக்கு இன்றும் நான் சாதாரண கடிதம் மூலம் தொடர்பு வைத்துள்ளேன். எதற்காக இதனை சொல்லுகிறேன் என்றால், இங்கு நிறைய மாணவர்கள் இருக்கிறீர்கள். நாம் நமது தாய், தந்தையருக்கு அடுத்து நமக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியரை மதிக்க வேண்டும். நாம் பெரிய பதவிகளில் இருக்கலாம். நமக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தவர்கள் ஆசிரியர்கள். அவர்களை நாம் மறக்கக்கூடாது என்பது எனது கருத்து.
இந்தப் புத்தகக் கண்காட்சியில் மாணவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி கொடுக்கிறார்கள் என்று ஸ்டாலின் குணசேகரன் சொன்னார். அதற்காக பதிப்பாளர்களை வாழ்த்துகிறேன். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறிய நூலகம் இருக்க வேண்டும். அதில் திருக்குறள், சட்டம் சம்மந்தமான நூல்கள் என தேவையான நூல்களை நாம் வைத்திருக்க வேண்டும். நல்ல நூல்களே நல்ல நண்பன். இவ்வாறு பேசினார்.
No comments:
Post a Comment