Tuesday 14 May 2013

மாணவர்கள் மொபைல் போனை பள்ளிக்கு எடுத்து வருவதால், இன்றைய ஆசிரியர்கள், பெரும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது



              "மாணவர்கள் மொபைல் போனை பள்ளிக்கு எடுத்து வருவதால், இன்றைய ஆசிரியர்கள், பெரும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது,'' என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை ஆராய்ச்சி பட்ட மேற்படிப்பு போர்டு
உறுப்பினர் கோகிலா தங்கசாமி பேசினார். மேட்டுப்பாளையம், ஹோலி ஏஞ்சல் ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வியியல் கல்லூரியில், முதல் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி தலைவர் ரூபன் சுகுமார் தலைமை வகித்தார். முதல்வர் ஜலஜாதேவி வரவேற்றார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை ஆராய்ச்சி பட்ட மேற்படிப்பு போர்டு உறுப்பினர் கோகிலா தங்கசாமி பேசியதாவது: கல்வியை, கல்வியாக சொல்லித்தராததால், மிகவும் குறுகிய வட்டமாக மாறியுள்ளது. அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும்; பட்டம் பெற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
                               
பல கல்லூரிகள் வணிக நோக்கத்துடன் செயல்படுகின்றன. ஒரு சில கல்லூரிகள் மட்டுமே சமூக சேவையுடன் செயல்படுகின்றன; இந்த நிலை மாற வேண்டும்.பெற்றோரின் கட்டாயத்தின் பேரில், குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனர். நிறைய மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவனாக வர வேண்டும் என்றவிருப்பத்தை, குழந்தையின் மீது திணிக்கின்றனர். இதனால் குழந்தைகள் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். ஆசிரியர்களும் பாடத்திட்ட கல்வியை மட்டுமே சொல்லிக் கொடுக்கின்றனர். சமூகத்துடன் இணைந்த வாழ்க்கைக் கல்வியை யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. இன்றைய மாணவர்கள் பள்ளிக்கு மொபைல் போனை எடுத்து வந்து விளையாடுகின்றனர். போன் வாங்கித் தருவதை பெற்றோர் பெருமையாக நினைக்கின்றனர். இதனால் கல்வியும், கலாசாரமும் சீரழிகிறது. மாணவர்கள் பல அறிவியல் தொழில் நுட்பத்தை அறிந்துள்ளனர். அதனால் இன்றைய ஆசிரியர்கள், பெரும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.
                             
சமூகம், அனுபவம் ஆகிய இரண்டையும் இணைந்த வாழ்க்கைக் கல்வியை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து, சமூக சிந்தனை உள்ளவர்களாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு மாணவர்களுக்குள்ளும் 120 திறமைகள் உள்ளனஅதில் சிறந்ததை வெளிக் கொண்டு வருவதே ஆசிரியர் பணி. பட்டமும், படிப்பும், கல்வியும், சமூகத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்இவ்வாறு, கோகிலா தங்கசாமி பேசினார். இதன் பின் 200 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். விழாவில் கல்லூரி அறங்காவலர்கள் ரூபி, தேவகுமார், மாணவிகள், ஆசிரியைகள் பங்கேற்றனர்
.

No comments:

Post a Comment