குரூப் 4 தேர்வு கவுன்சலிங்கில் பங்கேற்றவர்களுக்கு 7 நாட்களுக்குள் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் நட்ராஜ் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தேர்வில் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர் உள்ளிட்ட 10,718 காலிப்பணி இடத்தை நிரப்ப ஜூலை 7ம் தேதி எழுத்து தேர்வை நடத்தியது. இத்தேர்வை 10 லட்சத்து 34 ஆயிரத்து
421 பேர் எழுதினர். இந்த நிலையில், தேர்வின் போது வினாத்தாள் சரியாக அச்சிடப்படாமல் வழங்கப்பட்டது. எனவே, தேர்வு முடிவினை வெளியிட கூடாது என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து தேர்வு முடிவினை வெளியிட தடை விதித்து கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி ஐகோ ர்ட் உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவு அக்டோபர் 5ம் தேதி விலக்கி கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 8ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
இந்நிலையில், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு (1179 இடங்கள்) தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சலிங் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. இந்த பணி நாளை வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று 800 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சலிங்கை பார்வையிட்ட பின்னர் டிஎன்பிஎஸ்சி தலைவர் நடராஜ் அளித்த பேட்டி: டிஎன்பிஎஸ்சி நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு துறைவாரியாக பணிகள் ஒதுக்கப்படுவதில் காலதாமதம் ஏற்படுவதாக தேர்வாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதைத் தொ டர்ந்து துறை அதிகாரிகளுடன் டிஎன்பிஎஸ்சி ஆலோசனை நடத்தியது. அதன் ஒரு பகுதியாக தற்போது குரூப் 4 தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சலிங்கை முடித்தவர்களுக்கு 7 நாட்களுக்குள் பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குரூப் 1 பதவியில் ஒரு பணியிடத்துக்கு 20 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு வந்தனர். இனிமேல் ஒரு இடத்துக்கு 50 பேர் அழைக்கப்படுவார்கள். கடந்த ஜூலை 30ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வில் நேர்காணல் அல்லாத 3,220 பதவிகளுக்கான கலந்தாய்வு வரும் 22ம் தேதி தொடங்கும். கலந்தாய்வு நடக்கும் நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு நட்ராஜ் கூறினார்.
No comments:
Post a Comment