Monday 5 November 2012

ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க சிறப்பு முகாம்



       ஆசிரியர்களின் ஊதியம், தேர்வு நிலை, பதவி உயர்வு உள்ளிட்ட உரிமைகள் மற்றும் சலுகைகளை பெறுவதில் உள்ள சிரமங்களை போக்க, சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் கீழ், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், தங்களுக்கு சேர வேண்டிய ஊதிய உயர்வு, தேர்வு நிலை, சிறப்பு நிலை, பதவி உயர்வு மற்றும் இதர உரிமைகள், சலுகைகள் பெறுவதில் பல்வேறு
சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
                       எனவே, ஆசிரியர்களின் பண, பணி மற்றும் இதர பலன்கள் உடனுக்குடன் கிடைக்கும் வகையிலும், அனைத்து கல்வி அலுவலகங்களிலும், சிறப்பு குறை தீர்க்கும் முகாம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று, பள்ளிக் கல்வி இயக்குனர், அரசிற்கு கடிதம் எழுதினார்.இதை, தமிழக அரசு, சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவெடுத்து, இதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது. இதற்கான, நடைமுறைகளையும் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாதமும், முதல் சனிக்கிழமையில், தொடக்க கல்வித்துறை சார்ந்த ஆசிரியர்களுக்கு, உதவி தொடக்க கல்வி அலுவலகத்திலும்; அனைத்து உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடக்கும். இதில் பெறப்படும் மனுக்களை, பரிசீலித்து உடன் நடவடிக்கை எடுத்து உரிய உத்தரவு வழங்கப்பட வேண்டும்.
                             இரண்டாம் சனிக்கிழமைகளில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடக்கும் சிறப்பு முகாமில், தொடக்க கல்வி, மாவட்ட கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்படும் மனுக்களை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுத்து உத்தரவு வழங்கப்பட வேண்டும். மூன்றாம் சனிக்கிழமைகளில், தொடக்க பள்ளி கல்வி இயக்ககங்களில் நடக்கும் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில், மாவட்ட தொடக்க கல்வி மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது. முகாமில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் வரமுடியாவிட்டால், அவரின் நெருங்கிய உறவினர்கள் பங்கேற்கலாம்.

No comments:

Post a Comment