Wednesday 21 November 2012

இனி காப்பியடித்து பி.எச்டி பட்டம் பெற முடியாது..


             அனைத்துப் பல்கலையிலும் இதுவரை வழங்கிய, பிஎச்.டி., ஆய்வுக் கட்டுரைகளையும், "சாப்ட் காப்பி" யாக மாற்றி அனுப்பி வைக்க, பல்கலை மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. இவற்றை ஆன்-லைனில் வெளியிட உள்ளதால், "காப்பி" அடித்து ஆய்வுக்கட்டுரை தயாரித்து பட்டம் பெற்ற, ஒரு சில பேராசிரியர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். ஆசிரியர் பணியில் அனுபவம் வாய்ந்தவர்கள்,
மூன்று ஆண்டுகள் முதல், ஆறு ஆண்டுகள் வரை, குறிப்பிட்ட தலைப்பில் ஆய்வு செய்து, அதன் தொகுப்பை, ஆய்வுக் கட்டுரையாக, பல்கலை தேர்வாணையத்தில் தாக்கல் செய்வர். அதில் உள்ள ஆய்வுத் தகவல்கள் குறித்து, கைடு நடத்தும், "வைவா" தேர்வுக்குப் பின், பிஎச்.டி., பட்டத்தைப் பல்கலை வழங்குகிறது.
                                      இதில் பிஎச்.டி., படிப்புக்கு, "கைடாக" உள்ள பல பேராசிரியர்கள், பணத்துக்காக விலை போகின்றனர். இதனால், இன்டர்நெட்டில் உள்ள தகவல்கள், மற்ற ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் என, காப்பி அடிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளுக்கும், பிஎச்.டி., பட்டம் வழங்கப்படுகிறது. இதைத் தடுக்க, பல்கலை மானியக்குழு, புதிய நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, இனி பல்கலையில், பிஎச்.டி., ஆய்வுக் கட்டுரைகளை தாக்கல் செய்யும்போதே, அதன், "சாப்ட் காப்பி" யை பல்கலை மானியக் குழுவுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இதுவரை பல்கலைகளில் வழங்கப்பட்ட பிஎச்.டி., பட்டத்துக்கான அனைத்து ஆய்வுக் கட்டுரைகளையும், "-புக்" காக மாற்றி, அனுப்பி வைக்கவும், பல்கலைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
                    இதற்கான செலவினத் தொகையாக, ஒவ்வொரு பல்கலைக்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரைகளை, ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யும் பட்சத்தில், அனைவராலும் படிக்க முடியும் என்பதாலும், காப்பி தகவல்களை கண்டறிய பல்வேறு நவீன சாப்ட்வேர் வந்துவிட்டதாலும், காப்பி அடித்து, பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து, துணைவேந்தர் முத்துச்செழியன் கூறியதாவது: கல்வியாளர்கள் பல நாட்களாக வலியுறுத்தி வந்ததை, தற்போது பல்கலை மானியக் குழு அமல்படுத்தி உள்ளது. இதன்மூலம், அனைத்து ஆய்வுக் கட்டுரைகளையும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முழுமையாகப் படித்துப் பயன்பெற முடியும். மேலும், இனி ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் தரமானதாக இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தையும் உருவாக்கி உள்ளது. இவ்வாறு, முத்துச்செழியன் கூறினார்.

No comments:

Post a Comment