Saturday 30 March 2013

கல்வி அதிகாரிகள் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை



              விருத்தாசலம் அருகே விடைத்தாள்கள் ரயில் தண்டவாளத்தில் கிடந்த விவகாரம் தொடர்பாக அரசு தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தரா தேவி கூறும்போது, விடைத்தாள்கள் ரயில் தண்டவாளத்தில் கிடந்ததாக
எனக்கும் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோனிராஜ், மாவட்டக் கல்வி அலுவலர் வடிவேலு ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் இப்போது சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த அறிக்கை விரைவில் எனக்கு கிடைக்கும். அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற துரதிருஷ்டவசமான நிகழ்வுகளில் கடந்த காலங்களில் எந்தவித நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அதைப் போன்றே தற்போதும் மாணவ-மாணவிகளுக்குப் பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
                             விடைத்தாள் எரிந்த விவகாரம்: 2008 ஏப்ரல் 24-ம் தேதி இரவு வேலூர் ஊரிசு மேல்நிலைப் பள்ளி விடைத்தாள் திருத்தும் மையத்தில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. இதில் அங்கு திருத்துவதற்காக வைத்திருந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பல்வேறு பாடங்களின் 52,020 விடைத்தாள்கள் எரிந்து சாம்பலாகின. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் நேரில் சென்று விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளித்தார். பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படவில்லை. மாறாக அவர்கள் அரையாண்டுத் தேர்வில் பெற்றிருந்த சராசரி மதிப்பெண் கணக்கிடப்பட்டது நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment