Sunday 6 January 2013

மத்திய அரசு வழங்குவது போல் இடைநிலை ஆசிரியர் களுக்கு தமிழக அரசு சம்பளம் வழங்காவிட்டால் பள்ளிகளை இழுத்து மூடுவோம் - நாளிதழ் செய்தி



           மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியத்தை போல் தமிழக அரசு பல போராட்டங்களுக்கு பிறகும் இன்னும் வழங்கவில்லை. இதனால் அடுத்த கட்ட போராட்டம் பள்ளிகளை இழுத்து மூடக் கூடிய பெரிய அளவிலான போராட்டமாகத் தான் இருக்கும் என்று
தூத்துக்குடியில் ஏராளமான பெண் ஆசிரியர்கள் பங்கேற்ற தொடர் முழக்க போராட்டத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் சிவன் ஆவேசமாக பேசினார்.
மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியத்தை தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தொடர்ந்து பல போராட்டங்கள் நடந்து வருகிறது. இருப்பினும் தொடர்ந்து தமிழக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றாமல் மவுனம் சாதித்து மெத்தனம் காட்டிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
               அரசின் இந்த செயல் தொடக்கநிலை ஆசிரியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருப்பதாக அவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து பெரிய அளவிலான போராட்டத்தை நடத்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆறாவது ஊதியக்குழுவில் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள ஊதியத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.6.2006 முதல் வழங்க வேண்டும். ஆறாவது ஊதியக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளையும் தமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.
              ஆசிரியர் தகுதித் தேர்வினை உடனடியாக ரத்து செய்து வேலைவாய்ப்பு அலுவலக சீனியார்டி அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும். கல்வித்துறை அலுவலகங்களில்  உள்ள    காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது.
                         
தொடக்கபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சிவன் பேசியதாவது; மத்திய அரசு வழங்குவது போல் தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இந்த போராட்டத்திற்கு பிறகாவது உடனடியாக ஊதியத்தை வழங்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் மிகப் பெரிய அளவில் மறியல் போராட்டமாகவோ அல்லது பள்ளிகளை இழுத்து மூடக் கூடிய போராட்டமாகவோ இருக்கும். இதற்கான முடிவு மாநில செயற்குழுவில் எடுக்கப்படும். பள்ளிக்கல்வியில் தனியார் பொது பங்களிப்பை ரத்து செய்ய வேண்டும். இதுபோன்றவற்றை ஆரம்பத்திலே நிறுத்தாவிட்டால் எல்லாம் தனியார் மயமாகி கல்வித்துறையை மத்திய அரசு நாசமாக்கிவிடும். இதற்காக வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி பள்ளிக்கல்வியில் தனியார் பங்களிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி டில்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளன.
பொதுக்கல்வி முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையை அப்படியே அமல்படுத்த வேண்டும். பணியில் உள்ள ஒப்பந்த பாரா ஆசிரியர்களுக்கு தகுதியான பயிற்சி அளித்து முழு தகுதி பெற்ற ஆசிரியர்களாக்க வேண்டும்.
               பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்தி பணிக்கொடை வழங்க வேண்டும். தொடர்ந்து இந்த கோரிக்கை நிறைவேறும் வரை தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஓயமாட்டார்கள். உறங்கமாட்டார்கள். கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டங்கள் நடக்கும். இவ்வாறு சிவன் பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசுப்பிரமணியன் போராட்டத்தை முடித்து வைத்தார். போராட்டத்தில் பெண் ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கானோர் பெருந்திரளாக பங்கேற்றனர்

No comments:

Post a Comment