Tuesday 8 January 2013

ஈரோடு மாணவர் கணேசன் குழந்தை விஞ்ஞானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



                           ஈரோடு அருகே வனத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த மாணவர் கணேசன் குழந்தை விஞ்ஞானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஈரோடு மாவட்ட மலைகிராமமான பர்கூர் தாமரைக்கரையில் பள்ளி செல்லா
மற்றும் பள்ளி  இடைநின்ற  மாணவர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு படிக்கும் பழங்குடியின மாணவர் கணேசன், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட அளவில் நடத்திய தேசிய அறிவியல் மாநாட்டில் ஆற்றல் வளங்களின் பயன்பாடு என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தார்.
                               வாரணாசியில் நடந்த மாநில அளவிலான மாநாட்டிலும் தேர்வாகி பனாரஸ் பல்கலை.யில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் நடந்த 20வது தேசிய மாநாட்டில் கணேசனின் ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது. மாநாட்டின் இறுதியில் தமிழகம் சார்பில் குழந்தை விஞ்ஞானியாக கணேசன் தேர்வு பெற்றார். இவருக்கு விஞ்ஞானி லால்ஜிசிங் நினைவு பரிசும், பதக்கமும் வழங்கினார். இது குறித்து கணேசன் கூறியதாவது, நான் பள்ளிக்கு செல்லாமல் மாடு மேய்த்துக் கொண்டிருந்தேன். பாதியில் படிப்பை நிறுத்திய என்னை உண்டுஉறைவிட பள்ளியில் சேர்த்தனர். ஆசிரியர்கள் அளித்த ஊக்கத்தால் அறிவியல் மாநாட்டில் பங்கேற்றேன். 3 மாத காலம் மலைப்பகுதிகளில் ஆய்வு செய்து ஆய்வு கட்டுரையை தயார் செய்தேன். தேசிய அளவில் கலந்து கொண்டு பரிசு பெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது. மலை பகுதியிலேயே வசித்து வந்த எனக்கு இதுபோன்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது மறக்க முடியாதது. தொடர்ந்து எங்கள் பகுதியில் மாடு மேய்க்கும் மாணவர்களை கண்டு பிடித்து அவர்களையும் படிக்க சொல்வேன். இவ்வாறு கணேசன் கூறினார்.

No comments:

Post a Comment