கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு, அரசு ஊழியர்களுக்கு அவர்களின் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்திற்கு கேரள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு
தெரிவித்தனர். மேலும் இத்திட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி 8-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரித்தனர். இந்தப் போராட்டத்திற்கு ஆசிரியர் சங்கத்தினரும், பஸ் ஊழியர்களும் ஆதரவு தெரிவித்தனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்தப்படி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். இதனால்அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகளுக்கு ஊழியர்கள், பெரும்பாலானோர் வரவில்லை. அரசு பணிகளும் பாதிக்கப்பட்டது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
முதல்-மந்திரி உம்மன் சாண்டி இதுபற்றி கூறுகையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்தும் வேலை நிறுத்தம் கண்டிக்கத்தக்கது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வேலைக்கு வருபவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். வேலைக்கு வருபவர்களை யாராவது தடுத்தால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதற்கிடையே இன்று காலை தமிழகத்தில் இருந்து கேரள செல்லும் பஸ்கள் அனைத்தும் கேரள எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் மற்றும் கேரளாவுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் களியக்காவிளை பகுதியில் நிறுத்தப்பட்டன. காலை 7.30 மணிக்கு மேல் பஸ் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை என்று கிடைத்த தகவலின் பேரில் மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டன.
No comments:
Post a Comment