மேற்கு வங்க மாநில அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ள சேவை மசோதா அரசு ஊழியர்களுக்கு எதிரானது அல்ல என்று முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார். திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு அரசு ஊழியர் சங்கமான, ஐக்கிய ஊழியர் சங்க கூட்டமைப்பின் கூட்டத்தில்,
முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில் தெரிவித்ததாவது: மாநில அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ள சேவை மசோதாவானது, அரசு ஊழியர்களை தொல்லைப்படுத்தாது. தங்களது பணியை ஒழுங்காக செய்யாதவர்களை முறையாக பணி செய்ய வைப்பதற்காகவே கொண்டுவரப்படுகிறது. இதன் மூலம் மாநிலத்தில் வேலைக் கலாச்சாரம் வளரும்.அரசுப் பணிகளில் உள்ள ஊழியர்கள் தொடர்பான இடர்பாடுகள் நீக்கப்படும். பொது மக்களுக்கு முறையான சேவை அளிக்கும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பது பற்றியும் ஆலோசித்து வருகிறோம்.மாநிலத்தில் இடதுசாரி வர்த்தக சங்கங்கள் நடத்திய இரண்டு நாள் போராட்டத்தில் பங்கேற்காத அரசு ஊழியர்களை பாராட்டுகிறேன். அரசின் சேவைகள் மக்களுக்கு முறையாக கிடைப்பதில் தடங்கல்களை ஏற்படுத்த, கம்யூனிஸ்ட் ஆதரவு ஊழியர்கள் சிலர் முயன்று வருகின்றனர்.அது போன்ற சூழல் ஏற்படுவதை தடுக்கவே சேவை மசோதா கொண்டுவரப்பட உள்ளது. இந்த மசோதாவுக்கு அரசு ஊழியர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பொன் மின்னும் மேற்குவங்கத்தை காணவே நான் விரும்புகிறேன். அதற்கு மாநில அரசு ஊழியர்கள் தான் எனது பலம் என்று மம்தா பேசினார்.
No comments:
Post a Comment