Saturday 29 December 2012

ஜனவரி 5ம் தேதி தேசிய நாணயவியல் கருத்தரங்கம்



                              தென்னிந்திய நாணயவியல் கழகத்தின், 23வது தேசிய அளவிலான கருத்தரங்கம், ஜனவரி 5 மற்றும் 6ம் தேதிகளில் பொள்ளாச்சியில் நடக்கிறது. இதுகுறித்து, பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரி முதல்வர் பத்ரி நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்னிந்திய நாணயவியல் சங்கத்தின், 23வது தேசிய அளவிலான
கருத்தரங்கம், 2013, ஜனவரி, 5, 6ல் என்.ஜி.எம்., கல்லூரியில் நடக்கிறது. சக்தி குழுமங்களின் தலைவர் மகாலிங்கம் விழா மலரை வெளியிட்டு, கருத்தரங்கை துவக்கி வைக்கிறார்.
               தென்னிந்திய நாணயவியல் கழக தலைவரும், "தினமலர்" நாளிதழ் ஆசிரியருமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றுகிறார். இந்திய தொல்லியல் துறை தலைவர் மைசூர் மண்டலத்தை சேர்ந்த, ரவிசங்கர் தலைமை வகிக்கிறார். கல்லூரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் நாணயவியல் கண்காட்சியை துவக்கி வைக்கிறார். தென்னிந்திய நாணயவியல், பொது செயலர் நரசிம்மமூர்த்தி, அறிமுக உரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து, பல்வேறு தலைப்புகளில் விவாதம் நடக்கிறது. வரும், 6ம் தேதி நிறைவு விழாவில், ராஜபாளையம் ராஜூஸ் கல்லூரி முதல்வர் வெங்கட்ராமன் விழா நிறைவுரையாற்றுகிறார்.
             கருத்தரங்கில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி உட்பட, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், பல்வேறு தலைப்புகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி கட்டுரைகள் குறித்து விவாதிக்கவுள்ளனர். கருத்தரங்கில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் முத்துக்குமரனை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment