Wednesday 9 January 2013

உயர்கல்வி நிறுவனங்களில் மதிப்பாய்வு முறை அறிமுகம்



                    ஐஐடி.,கள் மற்றும் ஐஐஎம்.,கள் போன்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், 5 வருடங்களுக்கு ஒருமுறை, உள்ளார்ந்த துறை ஆய்வுகளை(Internal departmental reviews) நடத்தும் மற்றும் எக்ஸ்டர்னல் பேனல்(External panel) மூலம் மதிப்பீடு செய்யப்படும். சர்வதேச தர மதிப்பீடுகளின் அடிப்படையில், கல்வி நிறுவனங்கள் மற்றும்
தொழில் நிறுவனங்கள் ஆகிவற்றால் நடத்தப்படும் இந்த ஆய்வு, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில், வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றைக் கொண்டுவரும் என்ற நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில், அனைத்து ஐஐடி.,களும் இந்த மதிப்பாய்வுக்கு உட்படுவதற்கு, ஐஐடி கவுன்சில் இசைவு தெரிவித்தது.
                              இதுதொடர்பாக மனிதவள அமைச்சர் பல்லம் ராஜு கூறியதாவது: ஒவ்வொரு கல்வி நிறுவனத்தின் சக அமைப்புகளுடைய மதிப்பாய்வானது, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, காலநேர அடிப்படையில் மேற்கொள்ளப்படும். கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில், அவ்வப்போது ஏற்படும் மேம்பாடுகளின் அடிப்படையில் தங்களின் செயல்திட்டங்களை மாற்றியமைத்துக் கொள்வது ஐஐடி.,களின் முக்கியத் தேவையாகும். ஐஐஎம்.,களைப் பொறுத்தவரை, இத்தகைய மதிப்பீடு குறித்த கலந்தாய்வுகளில், முக்கிய கட்டத்தை அடைந்துள்ளன. மேற்கூறிய மதிப்பாய்வானது, உலகளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வு முறைகளின் அடிப்படையில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
                   மதிப்பாய்வு கமிட்டியில், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த 5 நிபுணர்கள் இடம்பெறுவார்கள். இந்த உறுப்பினர்கள், ஐஐடி கவுன்சிலின் தலைவரால் தேர்வு செய்யப்படுவார்கள். புதிதாக ஏற்படுத்தப்படும் ஐஐடி.,கள் 5 ஆண்டுகளைத் தாண்டியவுடன், அவைகளும், இந்த ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும். உலகின் சிறந்த 200 உயர்கல்வி நிறுவனங்கள் குறித்து எடுக்கப்படும் சர்வேக்களில் இந்திய ஐஐடி.,கள் ஒன்றுகூடி இடம்பெறுவதில்லை என்பது நெருடலான விஷயம். QS World university Rankings சர்வேயின்படி, கடந்த 2010ம் ஆண்டில் ஐஐடி-மும்பை 187வது இடத்தில் இடம்பெற்றது. ஆனால் 2011ம் ஆண்டில் ஐஐடி-மும்பை 225ம் இடத்திற்கு சரிந்து, 2012ல் 227ம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
                         நிலைமை இவ்வாறு இருக்க, ஐஐடி நிர்வாகங்கள் அளவுக்கதிகமான சுதந்திரம் எடுத்துக் கொண்டு, இட ஒதுக்கீடு மற்றும் மாணவர் சேர்க்கைக்கான புதிய மதிப்பீடு முறை உள்ளிட்ட, மத்திய அரசின் முடிவுகளை எதிர்த்தது மற்றும் தொடர்ந்து எதிர்த்து வருவதை இங்கே கவனிக்க வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment