Tuesday, 16 April 2013

மே மாதத்துக்கும் ஊதியம் வழங்க பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை



            அரசுப்பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிவோர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை மே மாதத்துக்கும் வழங்க வேண்டும் என்று தொகுப்பூதியம் பெறும் ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோடை விடுமுறை காலமான மே மாதத்துக்கான சம்பளம்
வழங்கப்படாததால் அந்த மாதத்தில் குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் திண்டாடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே ஆண்டின் அனைத்து மாதங்களிலும் தங்களுக்கு சம்பளம் வழங்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 20 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கடலூர் மாவட்ட கல்வி அலுவலரை சந்தித்துக் கொடுத்தனர். முக்கியமாக, கிராமக் கல்விக்குழுவின் மூலம் தங்களுக்கு தொகுப்பூதியம் அளிக்கப்படுவதால் பலரிடம் கையொப்பம் பெற்று சம்பளத்தை பெற சுமார் 20 நாட்கள் ஆகிவிடுவதாகவும், இந்த நடைமுறையை மாற்றி நிரந்தர ஆசிரியர்களுக்கு அளிப்பதுபோல மாதத்தின் முதல் நாளிலேயே நேரடியாக சம்பளத்தைப் வழங்க வகை செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். புயல், மழை காலங்களில் பள்ளி விடுமுறை விடும் நாட்களில் தங்களுக்கான ஊதியம் பிடிக்கப்படுவதாகவும், அதை மாற்ற வேண்டும் என்பதும் அவர்களின் முக்கிய கோரிக்கை ஆகும்.

No comments:

Post a Comment