Friday, 12 April 2013

பொறியியல் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் மும்முரம்



                      நடப்பு ஆண்டில், பொறியியல் சேர்க்கையை நடத்துவதற்கான பணியை, அண்ணா பல்கலை துவக்கி உள்ளது. சிறப்பு பிரிவின் கீழ் விண்ணப்பிக்க உள்ள மாணவ, மாணவியர், அதற்குரிய சான்றிதழ்களை பெறுமாறு அண்ணா பல்கலை. வலியுறுத்தி உள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்கள்
திருத்தும் பணிகள் முடியும் நிலையை நெருங்கி விட்டதால், தேர்வு முடிவுகளை தயாரிக்கும் பணியில், "டேட்டா சென்டர்" இறங்கி உள்ளது. இதனால், தேர்வு பரபரப்பு முடிந்து, முடிவுகள் எப்போது வரும் என, எட்டு லட்சம் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் எதிர்பார்த்து உள்ளனர். டேட்டா சென்டரில், கணிதம், அறிவியல் பாடங்களுக்கான, "டம்மி" பதிவு எண்கள் பதிவு செய்யும் பணியும், அதே நேரத்தில், முக்கியப் பாடங்கள் அல்லாத இதர பாடங்களுக்கான மதிப்பெண்களை பதிவு செய்யும் பணியும், விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்தப் பணியில், 75க்கும் மேற்பட்ட, கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
                             வழக்கமாக, மே, இரண்டாவது வாரத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் என்றாலும், இந்த ஆண்டு, மே 10ம் தேதிக்குள், முன்கூட்டியே வெளிவர வாய்ப்புள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், பொறியியல் சேர்க்கையை நடத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகளில், அண்ணா பல்கலை, வேகமாக இறங்கி உள்ளது. இம்மாதம் இறுதி வாரத்தில் இருந்து, விண்ணப்பங்கள் வழங்கப்படும் என, ஏற்கனவே, அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாநிலம் முழுவதும், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் உட்பட, 60க்கும் மேற்பட்ட கல்லூரிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக, 2 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன.
                                 இந்நிலையில், சிறப்பு பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியருக்கு, பல்வேறு அறிவிப்புகளை, அண்ணா பல்கலை வெளியிட்டு உள்ளது. மொத்தம் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில், விளையாட்டுப் பிரிவுக்கு, ஒரு சதவீத இடங் களும், சுதந்திர போராட்ட வீரர்களின் மகன், மகள்கள், காது கேளாதோர், பார்வையற்றோர் ஆகியோருக்கு, 3 சதவீத இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. அந்த வகையில், விளையாட்டு பிரிவின் கீழ், 100 இடங்களும், இதர சிறப்பு பிரிவுகளின் கீழ், 400 இடங்கள் வரையும் நிரப்பப்படுகின்றன. சிறப்பு பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர், சம்பந்தபட்ட சான்றிதழ்களை, விண்ணப்பத்துடன் இணைத்து, சமர்ப்பிக்க வேண்டும்.
                              அதன்படி, சிறப்பு பிரிவுக்கான விண்ணப்பங்களை, அண்ணா பல்கலை, தனது இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளது. அதில், ஒவ்வொரு பிரிவு குறித்தும் அறிவிப்பு தரப்பட்டு, அதற்கான விண்ணப்ப படிவங்களும் தரப்பட்டு உள்ளன. மாணவ, மாணவியர், அந்த விண்ணப்பங்களை அப்படியே, பதிவிறக்கம் செய்து, சம்பந்தபட்ட துறைகளுக்கு விண்ணப்பிக்கலாம். முதல் தலைமுறை மாணவ, மாணவியருக்கு, அரசே, கல்வி கட்டணங்களை செலுத்துகிறது. இதற்கான விண்ணப்பத்தையும், அண்ணா பல் கலை வெளியிட்டு உள்ளது. தேர்வு முடிவு வருவதற்குள், சம்பந்தபட்ட அரசு துறைகளில் விண்ணப்பித்து, உரிய சான்றிதழ்களை பெற்று வைத்துக் கொள்ளும்படி, மாணவ, மாணவியரை, அண்ணா பல்கலை கேட்டுக் கொண்டுள்ளது.
                                    இதன்மூலம், பொறியியல் சேர்க்கைக்கான பணிகளை, அண்ணா பல்கலை, இப்போதே துவக்கி உள்ளது. விரைவில், விண்ணப்பம் வினியோகம் செய்யும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம். சிறப்பு பிரிவினருக்கான விண்ணப்பங்கள் மற்றும் அண்ணா பல்கலையின் அறிவுரைகள் குறித்த விவரங்களைwww.annauniv.edu என்ற அண்ணா பல்கலை இணையதளத்தில் பார்க்கலாம். சேர்க்கைக்கு தனி இணையதள வசதி: ஒவ்வொரு ஆண்டும், பொறியியல் சேர்க்கை குறித்த விவரங்களை, தினமும் மாணவ, மாணவியர், பெற்றோர் தெரிந்துகொள்வதற்கு வசதியாக, அண்ணா பல்கலை இணையதளத்திற்குள், பிரத்யேகமாக தனி, "லிங்க்" வசதி ஏற்படுத்தப்படுகிறது. நடப்பு ஆண்டிற்கு, "TNEA 2013" என்ற தனி, "லிங்க்" வசதி, அண்ணா பல்கலை இணையதளத்தில் ஏற்படுதப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment