Tuesday, 9 April 2013

அரசு ஆரம்பப் பள்ளிகளை சீர்திருத்த வேண்டும்: தனியார் பள்ளி கூட்டமைப்பு கோரிக்கை!



                   "அரசு ஆரம்பப்பள்ளியை, பலகோணத்தில் சீர்த்திருத்தம் செய்து, அரசு ஊழியர் மற்றும் அனைத்து குழந்தைகளும் அங்கு படிக்க வழிவகை செய்து, பள்ளியின் தரத்தை உயர்த்த, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும்" என, நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின், நிர்வாகக் குழு கூட்டம், கந்தம்பாளையம் காந்தி மெட்ரிக் பள்ளியில் நடந்தது. தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ராஜா வரவேற்றார். மாநிலத் தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தமிழகத்தில், முன்பு, அரசு கடைநிலை ஊழியர் முதல் தலைமைச் செயலாளர் வரை, அரசு ஆரம்ப பள்ளியில் பயின்று, பெரிய பொறுப்புகளை வகித்தனர். ஆனால், கடந்த, 20 ஆண்டுகளாக, கடைநிலை ஊழியர்கள் முதல் பெரிய அதிகாரிகள் வரை, அரசுப் பள்ளியில், தங்கள் குழந்தைகளை சேர்ப்பதில்லை.
                       அரசு, கல்விக்காக மொத்த வருமானத்தில், 40 சதவீதம் செலவு செய்கிறது. அரசு ஆரம்பப்பள்ளியை பலகோணத்தில் சீர்த்திருத்தம் செய்து, அரசு ஊழியர் மற்றும் அனைத்து குழந்தைகளும் அங்கு படிக்க வழிவகை செய்து, பள்ளியின் தரத்தை உயர்த்த, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், முதற்கட்டமாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுடைய குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள், அரசு ஆரம்பப்பள்ளியில் சேர்க்க, தமிழக அரசு உத்தரவிட வேண்டும். தேர்வு மைய முறைகேடுகள், அரசுப் பள்ளியாக இருந்தாலும், தனியார் பள்ளியாக இருந்தாலும், இந்த அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. எதிர்காலத்தில், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல், நேர்மையாக தேர்வுகள் நடத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் சுயநிதிப் பள்ளிகளில் ஏழை, நடுத்தர மாணவர்களை சேர்த்து வந்தது, வரும் ஆண்டு முதல் சமுதாயத்தில் பின்தங்கிய மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள், மத்திய, மாநில அரசின் ஆர்.டி.., உத்தரவுபடி, 25 சதவீதம் அனைத்து பள்ளிகளிலும் சேர்க்கை நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment