குரூப் 1 தேர்வை எழுதுவதற்கான வயது வரம்பை, 45ஆக அதிகரிக்கக் கோரி, குரூப் 1 தேர்வர் கூட்டமைப்பினர், சென்னையில், நேற்று, உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். சேப்பாக்கம், விருந்தினர் மாளிகை அருகில் நடந்த போராட்டத்தை, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர்,
தா.பாண்டியன் துவக்கி வைத்து பேசியதாவது: கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், குரூப் 1 தேர்வை எழுதுவதற்கான வயது வரம்பு, அதிகமாக உள்ளது. நீங்கள், 45 வயதாக உயர்த்த வேண்டும் என, கேட்பதில் தவறில்லை. நீங்கள், வேலை வாய்ப்பை கேட்கவில்லை. தேர்வை எழுதுவதற்கான வாய்ப்பைத் தான் கேட்கிறீர்கள். இது, நியாயமான கோரிக்கை. இதை, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். இவ்வாறு, பாண்டியன் பேசினார்.
இதுகுறித்து, தேர்வர்கள் சிலர் கூறியதாவது: கேரளாவில், 50 வயது வரை, குரூப் 1 தேர்வை எழுதலாம். குஜராத், அரியானா, மேற்கு வங்கம், அசாம், உ.பி., ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், அனைத்து பிரிவினருக்கும், வயது வரம்பு, 45ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் தான், 35 வயது என, மிக குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரிவினரும் பயன்பெறும் வகையில், குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை, 45ஆக உயர்த்த, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தேர்வர்கள் கூறினர்.
No comments:
Post a Comment