Tuesday 15 October 2013

கல்வித்துறையில் சி.யூ.ஜி., மொபைல் இணைப்பு மீண்டும் அமல்


         அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கல்வித் துறை அலுவலக ஊழியர்களுக்கு சி.யூ.ஜி., மொபைல் இணைப்பு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் 1,728 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், அரசு மற்றும் அரசு
நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 29 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்வி குறித்த தகவல்கள், தேர்வு நேரங்களில் தபால் மூலம் சுற்றறிக்கை அனுப்புவது, இணையதள வசதி இல்லாதது, மொபைலில் சிக்னல் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக தகவல் பரிமாற்றம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
                       இப்பிரச்னையைத் தவிர்க்கும் வகையில் 2007ம் ஆண்டு அப்போதையை முதன்மைக் கல்வித் துறை அதிகாரியாக இருந்த குப்புசாமி, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மாவட்டக் கல்வி அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சி.யூ.ஜி., மொபைல் இணைப்பை வழங்கினார். இதன் மூலம் உடனடியாக இலவசமாக தகவல் பெறப்பட்டது. இந்த நடைமுறை சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. நாளடைவில் இதனைப் பயன்படுத்துவதில் ஆர்வம் குறைந்தது.

                தமிழக அரசு, கல்வித் துறையை மேம்படுத்தும் வகையில், இலவச சைக்கிள், கல்வி உதவித் தொகை, விலையில்லா மடிக்கணினி, பாடபுத்தகங்கள், நோட்டுகள் என 14 நலத் திட்டங்களை வழங்குகிறது. இதுபோன்ற நிலையில், கல்வித்துறையில் அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் குறித்தும், கல்வி குறித்த தகவல் உடனுக்குடன் தெரிவிக்கும் விதமாக சி.யூ.ஜி., இணைப்பு நடைமுறையை மீண்டும் அமல்படுத்த முதன்மைக் கல்வித் துறை அலுவலகம் முடிவு செய்தது. அதன்படி, முதன்மைக் கல்வித் துறை அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் கடலூர் மற்றும் விருத்தாசலத்தில் பணிபுரியும் ஊழியர்கள், மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் என மொத்தம் 385 பேருக்கு மொபைலில் சி.யூ.ஜி., இணைப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பைக் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment