Wednesday 3 July 2013

மாலை 3 மணிக்கு மேல் விடுமுறை, 15 ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு நிறுத்தம் தி.மலை முதன்மை கல்வி அதிகாரி அதிரடி



             அனுமதியின்றி பள்ளிக்கு அரை நாள் விடுமுறை அளித்த தலைமை ஆசிரியர் உள்பட 15 பேருக்கு ஆண்டு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்க முதன்மைக் கல்வி அதிகாரி பொன்.அருண்பிரசாத் உத்தரவிட்டுள்ளார். மேலும், பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்களுக்கு மெமோ
வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கையில் மாவட்ட கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. அதையொட்டி, கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளுக்கு திடீரென சென்று ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று பள்ளி முழு நேரம் நடைபெறும் என உத்தரவிட்டிருந்தும், அரை வேளையுடன் பள்ளிக்கு விடுமுறை அளித்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
               இது குறித்து, திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.அருண்பிரசாத் தெரிவித்ததாவது: பொதுத் தேர்வு தேர்ச்சியை அதிகரிக்க மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும், விடுமுறை நாட்களை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 29ம் தேதி சனிக்கிழமையன்று, கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு திடீர் ஆய்வுக்கு சென்றேன். அப்போது, எவ்வித அனுமதியும் இல்லாமல் அரை நாளுடன் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது தெரியவந்தது. எனவே, இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட 15 ஆசிரியர்களுக்கு ஒரு ஆண்டு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நாளில், மேல்சோழங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேலாரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் அன்று திடீரென ஆய்வு நடத்தினேன். அப்போது, மாலை 3 மணியுடன் பள்ளி முடிந்திருப்பது தெரியவந்தது. எனவே, இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உள்பட 21 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டுமெமோஅளிக்கப்பட்டுள்ளது.
             மேலும், நேற்று காலை 9 மணிக்கு ஆரணி அடுத்த ஒண்ணுபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீரென ஆய்வு நடத்தினேன். அப்போது, காலை இறைவணக்கத்தில் தலைமை ஆசிரியர் மட்டுமே பங்கேற்றிருந்தார். 10 ஆசிரியர்களும் தாமதமாக பள்ளிக்கு வந்தனர். எனவே, 10 ஆசிரியர்களுக்கும் விளக்கம் கேட்டுமெமோஅளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் தேர்ச்சியை அதிகரிக்கவும், அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருதியும் ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் இனிமேலும் தொடராதபடி ஆசிரியர்களின் பணி சிறப்பாக அமைய வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்
.

No comments:

Post a Comment