Wednesday 3 July 2013

எம்.டி.எஸ்., கலந்தாய்வை புறக்கணித்த மருத்துவ மாணவர்கள்



                             முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கான (எம்.டி.எஸ்.,) மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், தனியார் மருத்துவ கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களை, முழுமையாக சேர்க்காததை கண்டித்து, மாணவர்கள்,
கலந்தாய்வை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்தது. தமிழ்நாடு, டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் கீழ் இயங்கும், ராகாஸ், ராஜாஷ், ஜே.கே.கே., நடராஜா, ஸ்ரீ முகாம்பிகா, ஸ்ரீ ராமகிருஷ்ணா, கே.எஸ்.ஆர்., ஆகிய பல் மருத்துவக் கல்லூரிகளில், முறையே, 50, 6, 7, 16, 13, 14 என, மொத்தம், 106 எம்.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இவற்றில், விதிமுறைப்படி, ஒவ்வொரு கல்லூரியும், 50 சதவீதம் இடங்களை அரசுக்கு வழங்க வேண்டும். ஆனால், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில், நேற்று நடந்த, எம்.டி.எஸ்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், ஸ்ரீ முகாம்பிகா, ஸ்ரீராமகிருஷ்ணா ஆகிய பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீடாக முறையே, 5, 11 எம்.டி.எஸ்., இடங்கள் மட்டும் சேர்க்கப்பட்டன.
                            
இவற்றுடன், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வந்துள்ள, அண்ணாமலை பல்கலையின், 15 இடங்கள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரியின் மாநில ஒதுக்கீடாக உள்ள, 20 இடங்கள் என, மொத்தம், 51 எம்.டி.எஸ்., இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்தது. இதற்காக, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள், 38 எம்.டி.எஸ்., இடங்களையும் கலந்தாய்வு பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக் கோரி, கலந்தாய்வை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்காத தேர்வுக் குழுவினர், "அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு, கலந்தாய்வு நடைபெறும். இதில் பங்கேற்காதவர், கலந்தாய்விற்கு வராதவராக கருதப்படுவதோடு, அவர்கள், இரண்டாம் கட்ட கலந்தாய்விலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும்" என மிரட்டல் விடுத்தனர்.
                        
அதிகாரிகளின் மிரட்டலுக்கு, மாணவர்கள் பணியாததால், வேறுவழியின்றி, "தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தனியாக கலந்தாய்வு நடத்தப்படும். இன்று (நேற்று), அரசு பல் மருத்துவக் கல்லூரி எம்.டி.எஸ்., இடங்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடைபெறும்" என தேர்வுக் குழு அதிகாரிகள் அறிவித்தனர். இதற்கு மாணவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து, பல் மருத்துவர் அரவிந்த் என்பவர் கூறியதாவது: "ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு" என, அறிவித்துவிட்டு, அரசு பல் மருத்துவக் கல்லூரியின், எம்.டி.எஸ்., இடங்களுக்கு மட்டும், கலந்தாய்வு நடத்தியது கண்டிக்கத்தக்கது. எனினும், எங்கள் போராட்டத்தின் பயனாக, "பல் மருத்துவ கவுன்சில் (டி.சி..,) விதிமுறைப்படி, அனைத்து, தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், வரும், 25ம் தேதி கலந்தாய்வு நடைபெறும்&' என, அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
                         
இம்மாதம், 31ம் தேதிக்குள், எம்.டி.எஸ்., மாணவர் சேர்க்கை குறித்து, அனைத்து கல்லூரி நிர்வாகங்களும், டி.சி..,க்கு அறிக்கை அளிக்க வேண்டும். இந்நிலையில், கடைசி நேரத்தில் கலந்தாய்வை நடத்துவதால், தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டில் இடம் பெறுவோரை, வழக்கம் போல், தனியார் கல்லூரி நிர்வாகங்கள் அலைக்கழித்து, அந்த இடங்களை, பல லட்சம் ரூபாய்க்கு, நிர்வாக ஒதுக்கீட்டில் விற்க வாய்ப்புள்ளது. இந்த முறைகேட்டிற்கு, மருத்துவக் கல்வி இயக்ககம் இடம் கொடுக்காமல், ஜூலை, மூன்றாம் வாரத்திற்குள், எம்.டி.எஸ்., கலந்தாய்வை முடிக்க வேண்டும். இவ்வாறு, அரவிந்த் கூறினார்.
                              
இந்நிலையில், "அரசு பல் மருத்துவக் கல்லூரி, எம்.டி.எஸ்., இடங்கள் அனைத்தும் கலந்தாய்வில் நிரப்பப்பட்டு விட்டன. தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.டி.எஸ்., இடங்களுக்கான கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. கலந்தாய்வை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள், தேர்வுக் குழு அதிகாரிகள் ஆகியோரின் கருத்துகளை, இரு தரப்பினருக்கும் தெரிவிக்கும், "மீடியேட்டர்" பணியை, கீழ்ப்பாக்கம், சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சார்லஸ் சாம் ராஜதுரை மேற்கொண்டார். தங்களின் நியாயமான கோரிக்கை கேட்க, சுகாதார துறை அமைச்சர் வீரமணி வராதது குறித்து, கலந்தாய்விற்கு வந்திருந்த மாணவர்கள் வருத்தம் தெரிவித்தனர்
.

No comments:

Post a Comment