Wednesday 3 July 2013

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரி தில்லியில் உண்ணாவிரதப் போராட்டம்


              திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கக் கோரி தில்லியில் விரைவில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது என்றார் தில்லி தமிழ்ச் சங்கப் பொதுச்செயலரும், அகில இந்திய தமிழ்ச் சங்கங்கள்
கூட்டமைப்பின் பொதுச்செயலருமான இரா. முகுந்தன்.

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
                         
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரி தில்லியில் விரைவில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக அனைத்து தமிழ்ச் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தில்லி தமிழ்ச் சங்கத்தில் முத்தமிழ் போல நான்காவது தமிழாக அறிவியல் தமிழ் ஆய்வு மையம் ஜூலை 21-ல் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. உலகத் தமிழ்ச் சங்கங்களின் மாநாட்டை தில்லியில் விரைவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தில்லி தமிழ்ச் சங்கம், பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் சேவையைப் பாராட்டி மலேசிய பல்கலைக்கழகம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி விருது வழங்கவுள்ளது. தில்லி தமிழ்ச் சங்கம் 68 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்தச் சங்கத்தில் சுமார் 2,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழ் மொழியைப் பரப்புவது, தமிழர்களுக்கு ஊக்கம் அளிப்பது, இயல், இசை, நாடகத்தை வளர்ப்பது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தச் சங்கம் செயல்பட்டு வருகிறது என்றார் முகுந்தன். பேட்டியின்போது ரோட்டரி சங்க மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் கோ. அன்பரசன், ஆர். கேசவன், கே.ஆர். முரளிதரன் ஆகியோர் உடனிருந்தனர்
.

No comments:

Post a Comment