Monday 8 July 2013

ஆங்கில வழிக் கல்வி: மாணவர்களை சேர்க்க பெற்றோர் ஆர்வம்



           கரூர் மாவட்டத்தில் ஐம்பது அரசு பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி துவக்கப்பட்டுள்ள நிலையில், இப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது ஆங்கில அறிவு இருந்தால்
மட்டுமே, பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெறமுடியும் என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது. தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த ரஷ்யா, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் கூட, ஆங்கில கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறது. இதனால் ஆங்கில வழிக்கல்வியை பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளில், ஏழை பெற்றோர்களும் மிகவும் கஷ்டப்பட்டு தங்கள் குழந்தைகளை சேர்த்து, படிக்க வைத்து வருகின்றனர். ஆனால் தங்கள் தகுதியை மீறி, தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து விட்டு, பின் கட்டணம் செலுத்த முடியாமல் திணறுகின்றனர்.
                   
இதனால் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் இமாலய வளர்ச்சியை நோக்கி செல்ல, அரசு பள்ளிகள் நாளுக்கு நாள் மாணவர் சேர்க்கை குறைந்தது.அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்ட போதும், அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். அரசு பள்ளிகளின் நிலை மற்றும் ஆங்கில அறிவின் முக்கியத்துவத்தை உணர்ந்த தமிழக அரசு, இந்த கல்வியாண்டு முதல் தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வியை துவங்கியது. தற்போது, ஒன்று மற்றும், ஆறாம் வகுப்புகளில் ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டுள்ளது. இதன்படி, கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டாரத்தில், இரண்டு பள்ளிகளில், முதல் வகுப்பில், 26 பேரும், கிருஷ்ணராயபுரத்தில், ஏழு பள்ளிகளில், முதல் வகுப்பில், 82 பேரும், ஆறாம் வகுப்பில், 20 பேரும், .பரமத்தியில், இரண்டு பள்ளியில், முதல் வகுப்பில், 22 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
                                 
மேலும் தாந்தோணியில், 11 பள்ளிகளில், முதல் வகுப்பில், 174 பேரும், ஆறாம் வகுப்பில், 20 பேரும், குளித்தலையில், எட்டு பள்ளிகளில், முதல் வகுப்பில், 108 பேரும், தோகைமலையில், ஒன்பது பள்ளிகளில், முதல் வகுப்பில், 114 பேரும், ஆறாம் வகுப்பில், நான்கு பேரும், கடவூர், இரண்டு பள்ளிகளில், முதல் வகுப்பில், 18 பேர், கரூரில், ஒன்பது பள்ளிகளில், முதல் வகுப்பில், 118 பேரும், ஆறாம் வகுப்பில், 25 பேர் என, மொத்தம், 50 பள்ளிகளில், 731 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகம், சீருடை, காலணி ஆகிவை வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:வருவாயில் பின் தங்கிய நிலையில் உள்ள பெற்றோர், தங்கள் குழந்தைகளும் ஆங்கில வழியில் படிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள மிகவும் ஆவலாக உள்ளனர். இதன்மூலம், அரசு பள்ளிகளின் சேர்க்கை விகிதம் அதிகரிக்கும் என்பது உண்மை. ஆனால், ஆங்கில வழி கல்வியை மிகவும் தரமான முறையில் பயிற்றுவிக்க வேண்டுமென பெற்றோர் விரும்புகின்றனர். எனவே, ஆங்கில வழி கல்வியை கற்று கொடுக்க, தகுதி பெற்ற ஆசிரியர்களை இனம் கண்டு, அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்
.

No comments:

Post a Comment