Sunday 21 July 2013

பள்ளிகளுக்கு சப்ளை செய்யப்பட்ட 50 ஆயிரம் முட்டைகள் அழுகல்


                           ஆம்பூரில் பள்ளி மாணவர்களுக்கான சத்துணவுக்கு சப்ளை செய்யப்பட்ட சுமார் 50 ஆயிரம் முட்டைகள் அழுகிய நிலையில் இருந்தன. இதனைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பீகார் மாநிலத்தில்
அரசு பள்ளியில் மதிய உணவு  சாப்பிட்ட 23 குழந்தைகள் பலியாகிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் தமிழக பள்ளிகளில் சத்துணவு பணி தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் ஆம்பூர் பள்ளிகளில் புழுக்கள் நெளியும் அழுகல் முட்டைகள் சப்ளை செய்யப்பட்ட சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
                            இதுபற்றிய விவரம் வருமாறு: வேலூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட அரசு மற்றும் நிதியுதவி பெறும்  பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளி மாணவர்களுக்கு மாதனூர் ஒன்றிய அலுவலகம் மூலமாக முட்டை வினியோகம் செய்யப்பட்டு வருகிறதுஇந்நிலையில் நேற்று ஆம்பூர் நகரத்தில் உள்ள மஜ்ஹருல் உலூம் தொடக்க பள்ளி, மஜ்ஹருல் உலூம் மேனிலைப்பள்ளி, மத்ரஸயே தீன்யாத் பள்ளி, பாங்கி ஹயாத் பள்ளி, ஹஸ்னத் ஜாரிய பெண்கள் மேனிலைப்பள்ளி, ஹஸ்னத் ஜாரியா துவக்க பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளுக்கு வேனில் முட்டைகள் மாதனூர் ஒன்றிய அலுவலகத்தின் மூலமாக அனுப்பப்பட்டன
                      நேற்று மஜ்ஹருல் உலூம் தொடக்க பள்ளியில் முட்டை சப்ளை செய்யப்பட்ட போது வேனில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதை கவனித்த பெற்றோர் தலைமை செயலாளர் ரூமிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த அவர் 1,600  முட்டைகளையும் பரிசோதித்தபோது அனைத்து முட்டைகளும் கரிய நிறத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். முட்டைகளை உடைத்து பார்த்ததில் புழுக்கள் நெளிந்தன. வேறு சில பள்ளிகளில் சப்ளை செய்யப்பட்ட முட்டைகளையும் பரிசோதித்ததில் அவை அழுகி இருந்ததை பார்த்து பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த புகாரின்பேரில் ஆம்பூர் சமூக பாதுகாப்பு தாசில்தார் ஜெயக்குமார், விஏஓ கார்மேகம் ஆகியோர் பள்ளிக்கு வந்து முட்டைகளை ஆய்வு செய்தனர். பின்னர், இது குறித்து கலெக்டர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடன் மதிய உணவு அலுவலர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முட்டைகளை ஆய்வு செய்தார்
                             நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேலூர் மாவட்டத்தில் மாதனூர் ஒன்றியத்தில் உள்ள 13 பள்ளிகளுக்கு முட்டைகள் சப்ளை செய்யப்பட்டது. மொத்தம் 50 ஆயிரம் முட்டைகள் வேனில் எடுத்து சென்றபோதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகள் அழுகிய முட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். இதனிடையே 113 அங்கன்வாடி மற்றும் 110 சத்துணவு மையங்களுக்கு ஏற்கனவே  அனுப்பப்பட்ட சுமார் 1 லட்சம் முட்டைகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அழுகிய முட்டை இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்

                ஆம்பூரில் உள்ள சுமார் 20 பள்ளிகளுக்கு சத்துணவு திட்டத்தின்கீழ் சுமார் 15 ஆயிரம் முட்டைகள் நேற்று சப்ளை செய்யப்பட்டது. இவற்றில் 5 பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட 2100 முட்டைகளில் ஏராளமானவை அழுகிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 50 ஆயிரம் முட்டைகள் மாதனூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு சப்ளை செய்யப்பட்டதுஇதையடுத்து முட்டை வழங்குவது நிறுத்தப்பட்டது. புகாரின் பேரில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சரவணன் நேரில் விசாரணை நடத்தினார். அதில், ஆம்பூர் பகுதியில் உள்ள 20 பள்ளிகளுக்கு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சொர்ணபூமி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தினர் முட்டை சப்ளை செய்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பான விசாரணை அறிக்கையை கலெக்டர் சங்கரிடம் அளிக்கப்பட்டது.    இந்நிலையில், முட்டையை பரிசோதனை செய்யாமல் பள்ளிகளுக்கு அனுப்பிவைத்த மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளர் பாலய்யாவை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். முட்டை சப்ளை செய்த சொர்ணபூமி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க கலெக்டர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment