Friday 5 July 2013

போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் மாணவர்கள்



        திருப்பூரில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிது. திருப்பூரில் பல பள்ளிகள், போக்குவரத்து நெரிசலான பகுதிகளில் செயல்படுகின்றன.
காலை, மாலை நேரங்களில் பள்ளி சென்று திரும்பும் மாணவர்கள், நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். சில நேரங்களில், வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழக்கவும் நேரிடுகிறது. போலீஸ், கல்வித்துறை சார்பில் "ரோடு சேப்டி புரொடக்ட்" என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. சில பள்ளிகளில், ஒரு ஆசிரியர் தலைமையில் 10 முதல் 20 மாணவர்கள் குழுவாக சேர்ந்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி சேவை செய்தனர். நாளடைவில், இத்திட்டம் செயல்படவில்லை.
                          
பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, "ரோடு சேப்டி புரொடக்ட்" அமைப்பை மீண்டும் முழுவீச்சில் செயல்படுத்த, கல்வித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஆலோசிக்கின்றனர். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: "சில ஆண்டுகளுக்கு முன், திருப்பூரில் பள்ளி செல்லும் மாணவர்களின் நலன் கருதி, போலீஸ் மற்றும் கல்வித்துறை இணைந்து, "ரோடு சேப்டி புரொடக்ட்" என்ற அமைப்பை, நஞ்சப்பா பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளில் துவங்கியது. பள்ளி மாணவர்கள் ஈடுபட்டு, போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தினர். நாளடைவில் இந்த அமைப்பு செயல்படவில்லை. வாகன பெருக்கம் அதிகரித்ததால், போக்குவரத்து நெரிசலால், மாணவர்கள் பாதுகாப்பான முறையில் பள்ளிக்கு சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது.கல்வித்துறை மற்றும் போலீசார் இணைந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் தலைமையில், 50 மாணவர்கள் "ரோடு சேப்டி புரொடக்ட்" அமைப்பில், முழுமையாக ஈடுபடஉள்ளனர்.
                        
முதல்கட்டமாக, போலீசார் மூலம், ஆசிரியருக்கு சாலை பாதுகாப்பு குறித்த விதிமுறைகள், விபத்து தடுப்பு நடவடிக்கை குறித்த பயிற்சி அளிக்கப்படும். பின், மாணவர்களுக்கும் விதிமுறை குறித்து பயிற்சி அளிக்கப்படும். பள்ளி துவங்கும் முன், காலையில் அரை மணி நேரமும், பள்ளி விடும் நேரத்துக்கு அரை மணி நேர முன்பும், போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில், மாணவர்கள் ஈடுபடுவர்," என்றார்
.

No comments:

Post a Comment