Friday 20 September 2013

இலவச கல்விக்கு எப்போது கிடைக்கும் ரூ.813 கோடி?


             ஆதிதிராவிட மாணவர்களுக்கு, இலவச கல்வி வழங்க, கொண்டு வரப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்த, நடப்பு ஆண்டுக்கு, 813 கோடி ரூபாய் தேவைப்படுவதால், திட்டத்தை, நடைமுறைப்படுத்துவதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள, ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியின மாணவர்களின், கல்வித்தரம் உயர வேண்டும் என்ற நோக்கில், கடந்த ஆண்டு, செப்டம்பரில், புதிய அரசாணை வெளியிடப்பட்டது. அதில், "பெற்றோரின் ஆண்டு வருமானம், இரண்டு லட்சத்துக்கும் குறைவாக உள்ள, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ மாணவர்கள், அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதி கல்லூரியில், கல்வி, கற்பிப்பு, நூலகம், மாணவர் சங்கம் போன்றவற்றிற்கு, எந்த கட்டணமும் கட்ட தேவையில்லை" என குறிப்பிடப்பட்டது.
                       இத்திட்டம் அனைத்து தரப்பிலும், பலத்த வரவேற்பை பெற்றது. அத்திட்டத்திற்கு என, 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், வழக்கமான அரசுத்திட்டம் போல, இத்திட்டத்தையும் அமல்படுத்துவதில், பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. "மாணவர் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை" என அரசு அறிவித்தாலும், அதற்குரிய தொகையை, கல்லூரிகளுக்கு வழங்குவதில், தாமதம் ஏற்பட்டது. இதனால், பல மாணவர்கள், பெரும் துயரத்துக்கு ஆளாகினர்; பருவத்தேர்வு கட்டணம் கட்டாத மாணவர்கள், கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கடந்த ஆண்டை போல, 300 கோடி ரூபாய், இந்தாண்டும் தேவைப்படும் என, நலத்துறை கணக்கிட்டது. ஆனால், இக்கல்வி ஆண்டில், பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், மொத்தமாக, 813 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இத்தொகை, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு வந்து, அங்கிருந்து, மாவட்ட நல அலுவலர்கள் மூலம் பிரித்து அளிக்கப்படுவதற்குள், ஓராண்டாகி விடும்.

                         ஏற்கனவே, அரசிடமிருந்து நிதி வராததால், பல கல்லூரிகள், மாணவர்களை, கட்டணம் கேட்டு துன்புறுத்தி வருகின்றன. நிதி வழங்குவதை தாமதப்படுத்தினால், ஆதிதிராவிட மாணவர்களை, சுயநிதி கல்லூரிகள் நிர்வாகங்கள், கல்லூரியை விட்டே அனுப்பி விடும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment