Saturday 21 September 2013

அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி: ஜெ. உத்தரவு


             வண்ணமயமான நீதிக்கதைகளைச் சொல்வதற்கான ஏற்பாடுகளுடன், அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியை போதிப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
'அங்கன்வாடி மையங்களில் பயன்பெறும் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லும் வகையில் மனதளவில் தயார் செய்வதற்காக, முன்பருவக் கல்வி போதனை நல்ல தரமுள்ள வகையில் அளிக்கப்படவேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு பல வண்ணங்களில் எட்டு நீதிக்கதைகளை அச்சிட்டு, அவற்றை ஒவ்வொரு அங்கன்வாடி மையங்களில் உள்ள சுவர்களில் நெகிழ்நுரை அட்டைகளில் (Foam Board) பொருத்தி அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியை போதிப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இப்பணி முதற்கட்டமாக 10,000 அங்கன்வாடி மையங்களில் 1 கோடியே 20 லட்சம் ரூபாயில் செயல்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுவர்.

            அங்கன்வாடி மையங்கள் மூலம் 6 முதல் 60 மாதம் வரை வயதுள்ள குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இணை உணவு, எடை / வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் சுகாதார சேவைகள் வழங்கப்படுகின்றன. மகப்பேறு காலத்தில் கரு வளர்ச்சியை மதிப்பீடு செய்யும் பொருட்டு கர்ப்பிணி தாய்மார்களின் உடல் எடை அதிகரிப்பை கண்காணிப்பது மிகவும் அவசியம். மேலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதம் தோறும் எடை எடுத்த பின் தாய் சேய் நல அட்டை /வளர்ச்சி கண்காணிப்பு பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் எடைகளை கண்காணிக்கும் வகையில், பச்சிளம் குழந்தைகளுக்காக 54,439 எடை பார்க்கும் கருவிகளும், குழந்தைகளுக்காக 11,333 எடை பார்க்கும் கருவிகளும், தாய்மார்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்காக 16,988 எடை பார்க்கும் கருவிகளும் வாங்கி வழங்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக 7 கோடியே 11 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய்க்கு நிதி ஒப்பளிப்பு செய்தும் அவர் உத்தரவிட்டுள்ளார்' என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment