Sunday 29 September 2013

டி.இ.டி., தேர்வு முடிவு வெளியிடுவதில் இழுபறி


              கேள்வித்தாள் வெளியான சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டம், டி..டி., தேர்வு முடிவில், முதலிடத்தை பிடித்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், இழுபறிநிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில்,
மூன்றாவது முறையாக, ஆகஸ்ட், 17, 18ம் தேதிகளில், டி..டி., தேர்வுகள் நடந்தன. 11 லட்சம் பேர், இந்த தேர்வை எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும், கம்ப்யூட்டர் மூலம் மதிப்பீடு செய்து முடிக்கப்பட்டு விட்டன. தேர்வு முடிவை, தேர்வர்கள், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனினும், தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என, தெரியாத நிலை, நீடித்து வருகிறது.
                   இதுகுறித்து விசாரித்தாலே, ‘தயாராக உள்ளது; விரைவில் வெளியிடுவோம்என்ற பதிலை, அதிகாரிகள் திரும்ப, திரும்ப கூறி வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த, இரு டி..டி., தேர்வுகளின் முடிவுகள், மிக விரைவாக வெளியிடப்பட்டன. கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்த தேர்வு முடிவுகள், ஆகஸ்ட் இறுதியில் வெளியிடப்பட்டன.அதேபோல், அக்டோபர், 14ம் தேதி நடந்த இரண்டாவது டி..டி., தேர்வு முடிவுகள், நவம்பர், முதல் வாரத்தில் வெளியிடப்பட்டன. இப்படி, இரு தேர்வுகளின் முடிவுகளை, விரைவாக வெளியிட்ட டி.ஆர்.பி., இந்த முறை, ஒன்றரை மாதம் கடந்த நிலையிலும், அமைதிகாத்து வருவது, தேர்வர் மத்தியில் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.
                       இந்நிலையில், தேர்வு முடிவில், தர்மபுரி மாவட்ட தேர்வர்கள், முதலிடத்தை பிடித்திருப்பதாகவும், இதன் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், டி.ஆர்.பி., காலம் தாழ்த்தி வருவதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்வு துவங்குவதற்கு முதல் நாள், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், டி..டி., கேள்வித்தாள், வெளியானதாக, தகவல்கள் வெளியாயின. இதுதொடர்பாக, போலீசார் அதிரடி விசாரணை நடத்தி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, ஆறு பேர் கும்பலை, போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, பின்னாளில், கைது எண்ணிக்கை, 15 தாண்டியது.கைதான கும்பல்களிடம் இருந்து, 7.4 லட்சம் ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து, கேள்வித்தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. எனினும், அதில் இடம்பெற்றிருந்த கேள்விகளும், தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளும் ஒன்று அல்ல என்றும், கைதான கும்பல் வைத்திருந்தது, போலியான கேள்வித்தாள் என்றும், போலீசார் தெரிவித்திருந்தனர்.

                    டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யாரும், "டி..டி., தேர்வில், சிறு முறைகேடு கூட நடக்கவில்லை" என தெரிவித்தார். இப்படியிருக்கும் போது, சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டத்தில், தேர்ச்சி அதிகம் என, தகவல் வெளியாகி இருப்பது, தேர்வர்கள் மத்தியில், புளியை கரைத்துள்ளது. இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தர்மபுரி மாவட்டம், அனைத்து வகையிலும், மிகவும் பின்தங்கிய மாவட்டம். வேலை வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை. இதனால், படித்த இளைஞர்கள், அரசு வேலை வாய்ப்புகளை பெரிதும் நம்பி உள்ளனர். போட்டித் தேர்வுக்கு, கடுமையாக உழைக்கின்றனர். இதனால், பொதுவாகவே, எந்த போட்டித் தேர்வாக இருந்தாலும், தர்மபுரி மாவட்ட இளைஞர்கள், அதிகளவில் தேர்வு பெறுவர். அந்த வகையில், டி..டி., தேர்விலும், அதிகமானோர் தேர்ச்சி பெற்றிருக்கலாம். இதில், தேவையில்லாமல், சந்தேகம் அடைய தேவையில்லை. இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment