Sunday 22 September 2013

கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தலைமைச் செயலகம் நோக்கிப் பேரணி: ஆசிரியர் கூட்டணி முடிவு


          பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(திங்கள்கிழமை) எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கிப் பேரணி நடத்த தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் முடிவு செய்துள்ளனர். தமிழக ஆரம்பப் பள்ளி
ஆசிரியர் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூரில் சனிக்கிழமை மாநில பொதுச் செயலாளர் ஆசிரியர் தாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆறாவது ஊதியக் குழு முரன்பாடுகளை நீக்க தமிழக அரசு அமைத்த 3 நபர் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் அரசாணையில், பல துறைகளில் ஊதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 5 ஆயிரத்து 200-ல் இருந்து 9 ஆயிரத்து 300 ஆக மாற்ற தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை மனு சமர்பித்தும் ஊதிய மாற்றம் இடம் பெறவில்லை.

                  எனவே இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ. 9 ஆயிரத்து 300 என ஊதிய மாற்றம் வழங்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்து பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி நியமணம் செய்ய வேண்டும்.எம்.பில் மற்றும் எம்.எட் படித்த ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். உடல் நல காப்பீடு திட்டத்தில் சேர்ந்துள்ள ஆசிரியர்கள் சில நோய்களுக்கு மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிகிறது. இக்குறையை நீக்கி அனைத்து நோய்களுக்கும் உண்டான சிகிச்சை அளிப்பதற்கான உத்தரவு வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கிப் பேரணியாக செல்ல இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment