தமிழகத்தில், புதிதாக, 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, "வீடியோ கான்பரன்ஸ்" மூலம் துவக்கி வைத்தார். இக்கல்லூரிகளில், 210 ஆசிரியர் பணியிடம், 238 ஆசிரியர் அல்லாத பிற
பணியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த, இரண்டு ஆண்டுகளில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், 22 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டு, 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி; தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி; திருப்பூர் மாவட்டம் காங்கேயம்; நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்; தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம்(மகளிர்); கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்; காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி; ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, திருவாடணை, முதுகுளத்தூர்; விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஆகிய இடங்களில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, கடலூர் மாவட்டம் திட்டக்குடியில், திருவள்ளூவர் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆகியவற்றை, நேற்று தலைமை செயலகத்தில், "வீடியோ கான்பரன்ஸ்" மூலம் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
இக்கல்லூரிகளில், 210 ஆசிரியர் பணியிடம், 238 ஆசிரியர் அல்லாத பிற பணியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பணியாளர் சம்பளம், அலுவலக செலவினம், உபகரணங்கள் கொள்முதல் செய்ய, 17.09 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய கல்லூரிகளுக்கு, நிரந்தர கட்டடம் கட்ட, 105.85 கோடி ரூபாய்க்கு, நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், முதல் கட்டமாக பி.ஏ.,(ஆங்கிலம்), பி.ஏ., (தமிழ், பி.காம்., பி.எஸ்சி., கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் அறிவியல், பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவியர் சேர்க்கையும் நடந்துள்ளது. கல்லூரி துவக்க விழா நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், தொழில் துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment