Friday, 6 September 2013

சத்துணவு மையங்களில் புதிய உணவு வகைகளை தயாரிக்க வசதியாக சமையல்பாத்திரங்களை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.



             இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவினை வழங்கி, அதன் மூலம் ஊட்டச்சத்து குறைவினை அகற்றுதல், பள்ளி செல்லும்
குழந்தைகளின் விகிதத்தினை அதிகரித்தல், இடைநிற்றல் அகற்றல் ஆகிய நோக்கங்களை எய்தும் பொருட்டு, எம்.ஜி.ஆரால் 1982 ஆம் ஆண்டு சத்துணவு திட்டம் துவக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த 30 ஆண்டுகளாக ஒரே மாதிரியான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனை அறிந்த முதல்வர் ஜெயலலிதா, காலத்திற்கு ஏற்பவும், குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்பவும், புதிய வகை உணவுகளை சத்துணவு மையங்கள் மற்றும் குழந்தை நல மையங்களில் அறிமுகப்படுத்துவதற்கு ஆணையிட்டார். இந்த உணவு வகைகளை தயாரிக்க இம்மையங்களில் பணிபுரிபவர்களுக்கு செயல்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.இந்த உணவுகளை தரமாகவும், உரியநேரத்திலும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு மிக்சி வழங்க ஏற்கெனவே முதல்வர் ஆணையிட்டுள்ளார். மேலும், இந்த மையங்களில் புதிய உணவு வகைகளை தயாரிக்க தேவையான சமையல் உபகரணங்கள் வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
            எனவே ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 32 முன்னோடி வட்டாரங்களில் உள்ள 3,963 குழந்தைகள் நல மையங்களுக்கு தலா ஒரு (எவர்சில்வர்) கரண்டி 66 ரூபாய் விலையிலும், ஒரு (இண்டோலியம்) கடாய் 495 ரூபாய் விலையிலும் என மொத்தம் 561 ரூபாய் வீதம் 3,963 குழந்தைகள் நல மையங்களுக்கு சமையல் உபகரணங்கள் 22 லட்சத்து 23 ஆயிரத்து 243 ரூபாய் செலவில் வாங்கி வழங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
.

No comments:

Post a Comment