Tuesday 1 January 2013

முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு: 70% பேருக்கு சொந்த மாவட்டத்தில் பணி



                புதிதாக தேர்வு பெற்ற, முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, ஆன்-லைன் வழியில், 32 மாவட்டங்களிலும், நேற்று நடந்தது. 2,273 பேரில், 70.39 சதவீதம் பேர், அவரவர் சொந்த மாவட்டங்களில், பணி நியமன உத்தரவுகளை பெற்றனர். போட்டித் தேர்வில் தேர்வு பெற்ற முதுகலை
ஆசிரியர்களுக்கு, கடந்த மாதம், 13ம் தேதி, சென்னையில் நடந்த விழாவில், தேர்வு பெற்றதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, பணி நியமன கலந்தாய்வு, 32 மாவட்டங்களிலும், நேற்று நடந்தது. 2,895 பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்திய போதும், 2,273 பணியிடங்கள் மட்டும், நேற்று நிரப்பப்பட்டன. மாவட்டத்திற்குள் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு, காலையிலும்; வெளி மாவட்டங்களில் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு, பிற்பகலிலும் நடந்தன.
                              
மொத்த தேர்வர்களில், 1,600 பேர், அவரவர் சொந்த மாவட்டங்களில், பணி நியமன உத்தரவுகளை பெற்றனர். மீதமிருந்த, 673 பேர் மட்டும், சொந்த மாவட்டங்களில் விரும்பிய இடங்கள் கிடைக்காததால், வெளி மாவட்டங்களில் உள்ள பணியிடங்களை தேர்வு செய்தனர். சென்னை மாவட்டத்தில் இருந்து, 50 பேர் தேர்வு பெற்றிருந்தனர். ஆனால், 18 இடங்கள் மட்டுமே காலியாக இருந்தன. இதனால், 32 பேர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்த காலி பணியிடங்களை, தேர்வு செய்தனர். பணி நியமன உத்தரவுகளை பெற்ற அனைவரும், நாளை பணியில் சேர வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது
.

No comments:

Post a Comment