Sunday 30 June 2013

பள்ளி நேரம் மாற்றப்படுமா?.... போக்குவரத்து நெரிசல் குறையுமா? - நாளிதழ் செய்தி



                 அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்க, அனைத்து பள்ளிகளையும், காலை 8.30 மணிக்கே துவங்கிட, கலெக்டர் ராஜாராமன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை
விடுத்துள்ளனர். மதுரையில்,போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பள்ளிகள் துவங்கும் நேரத்தை, காலை 8.30 மணிக்கு மாற்றி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதே போன்று சிவகங்ககையிலும்  அமல்படுத்தலாம். சிவகங்கையில் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் காலை 9.30 மணிக்கு துவங்குகின்றன. தனியார் நிறுவனங்களிலும் காலை 9 முதல் 10 மணிக்குள் பணி நேரம் துவங்குகிறது. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளும் காலை 9.30 மணிக்கு துவங்குகின்றன.
                             
இந்நேரத்தில் எல்லோரும் ரோட்டிற்கு வருகின்றனர். பள்ளி வாகனங்கள், மாணவர்களின் சைக்கிள், மாணவர்களை அழைத்து வரும் பெற்றோரின் வாகனங்கள், வேலைக்கு செல்பவர்களின் வாகனங்கள் மட்டுமன்றி அரசு பஸ்கள், ஆட்டோக்களும் இந்நேரத்தில் அதிகம் இயங்குகின்றன. இதனால் நகரில் நெரிசல் ஏற்படுகிறது. காலை, மாலை "பீக் நேரங்களில்" குறிப்பிட்ட இடங்களுக்கு, குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாது. எனவே, நகரில் பள்ளிகள் துவங்கும் நேரத்தை, காலை 8.30 மணிக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல் இருக்காது. மாலையிலும் சீக்கிரமே, டிராபிக் சிக்கலில் சிக்காமல், மாணவர்கள் வீட்டிற்கு வர இயலும். மும்பை போன்ற பெருநகரங்களில் பள்ளிகள் காலை 8 மணிக்கே துவங்கி, மதியம் முடிந்து விடுகின்றன. நெரிசல் மிக்க அங்கேயே, மாணவர்கள், ஆசிரியர்கள் 8 மணிக்கு பள்ளிக்கு சென்று சேர்ந்து விடும் போது, நமக்கு இது ஒரு சிரமமான காரியம் அல்ல.
                       
சி.செண்பகவள்ளி, குடும்பத்தலைவி, காரைக்குடி: தற்போது 9.30 மணிக்கு பள்ளிகள் தொடங்குகிறது. குழந்தைகள் காலை 7 மணிக்கு தான் எழுந்திருக்கின்றனர். ஒரே நேரத்தில், கணவரையும், குழந்தைகளையும் கவனிக்க வேண்டியதுள்ளது. பள்ளிகள், 8.30 மணிக்கு தொடங்கும் பட்சத்தில், குழந்தைகளை காலை ஆறு மணிக்கு எழுப்பி விடலாம். காலையில் பள்ளி செல்ல வேண்டும், என்பதால் இரவில் "டிவி"க்களை தவிர்க்க முடியும். குழந்தைகள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். போக்குவரத்து நெரிசல் இன்றி, பிள்ளைகளை பள்ளியில் விட்டு வரலாம். மதியம் சீக்கிரம் பள்ளி முடிவடையும் பட்சத்தில், சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு, அதன்பிறகு டியூஷன் செல்ல முடியும்.
                    
எம்.தமயந்தி, தலைமை ஆசிரியை, சிவகங்கை: அலுவலகம்,பள்ளி திறக்கும் நேரம் இரண்டும், ஒன்றாக இருப்பதால், பஸ்களில் ஊழியர்கள், மாணவர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கூடுதல் பஸ்கள் இன்றி,கிராமப்புற மாணவர்கள் சிரமம் அடைகின்றனர். எங்களை போன்ற ஆசிரியைகளும், பள்ளிக்கு வருவது சிரமமாக உள்ளது. இதை தவிர்க்க, பள்ளி நேரத்தை காலை 8.30 மணிக்கு மாற்றலாம். பள்ளி துவங்கும், விடும் நேரங்களில் கட்டாயம், மாணவர்களுக்கென தனியாக பஸ்களை இயக்கினால், சிரமம் குறையும். காலையில் பள்ளி துவங்கினால், பாடம் எடுப்பது எளிமையாக இருக்கும். மாணவர்களும் நன்கு புரிந்து கொள்வர். எட்டு வகுப்பிற்கு பின், மாலை 3 - 4 மணிக்குள் பள்ளியை விட்டால், மாணவர்கள் சிரமம் இன்றி,வீட்டிற்கு சென்றுவிடுவர்.
                 
.யமுனா, பிளஸ் 1 மாணவி, சிவகங்கை: நான்,சிவகங்கை அரசு பள்ளியில் படிக்கிறேன். வேம்பத்தூர் அருகே குட்டித்தினி கிராமம். காலை திருப்பாச்சேத்தி - சிவகங்கைக்கு ஒரு டவுன் பஸ் மட்டுமே வருகிறது. இதில் தான்,மாணவர்கள், தனியார், அரசு ஊழியர்கள்,கல்லூரி மாணவ, மாணவிகள் வருகின்றனர். இதனால், கூட்டம் அதிகமாக காணப்படும்.பள்ளி வருவதற்கு பெரும் சிரமம்.இதை தவிர்க்க, காலை 8.30மணிக்கு பள்ளி திறப்பது நன்று. காலையில், ஆசிரியர்கள் சொல்லித்தரும் பாடங்கள் எளிதில் புரியும்.
                  
பி.சுபாஷ், பிளஸ் 2 மாணவர், காரைக்குடி: எங்கள் ஊரான புதுவயல் பெத்தானேந்தலுக்கும் பள்ளிக்கும் 18 கி.மீ., இங்கிருந்து காலை 7.30 மணிக்கும், 8.45 மணிக்கும் பஸ் வசதி உள்ளது. பள்ளி வந்து சேர 45 நிமிடங்களாகும். 7.30 மணிக்கு பஸ்சில் வந்தால் நெரிசல் இருக்காது. ஆனால், 8.45 மணி பஸ்சில் வந்தால்,படியில் நின்று பயணம் செய்ய கூட வழி இருக்காது. காலையில் 8 மணிக்கு கிளம்பி, 9.30-க்கு பள்ளிக்கு வந்து, மாலை  4.20க்கு முடிந்து, டியூஷன், ஸ்பெஷல் கிளாஸ் என அலைந்து, வீட்டுக்கு செல்ல இரவு 9 மணி ஆகிவிடுகிறது.

ஓய்வில்லாத உழைப்பை பிளஸ் 2 மாணவர்களாகிய நாங்கள் அனுபவிக்கிறோம். இதை விடுத்து, பள்ளி தொடங்கும் நேரத்தை, 8.30 மணிக்கு ஆரம்பிக்கும்போது, சீக்கிரம் எழலாம். மாலையில் சீக்கிரம் விடுவதால், தொடர்ச்சியாக மன உளைச்சலுக்கு உள்ளாகும் மாணவர்களுக்கு ரிலாக்ஸ் ஏற்படும் என்றார்
.

No comments:

Post a Comment