Friday 28 June 2013

எஸ்பிஐ ஏடிஎம் கார்டுக்கு சேவைக் கட்டணம் அமல்


                        ஏடிஎம் அட்டையுடன் தொடர்புடைய எஸ்எம்எஸ் சேவைக்கு ஒரு காலாண்டுக்கு ரூ.15 கட்டணமாக ஆண்டுக்கு ரூ.60 வசூலிக்கும் புதிய திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி அமல்படுத்தியுள்ளது. ஏடிஎம் கார்டில் பணம் எடுக்கும்போதும்,
செலுத்தும்போதும் வாடிக்கையாளர்களின் செல்பேசியில் வங்கி மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது. எனவே "எஸ்எம்எஸ் சேவைக்கு கட்டணம்' என்ற பெயரில் ஏடிஎம் கார்டுக்கு சேவைக் கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் என முதல் மூன்று காலாண்டுக்கு சேவைக் கட்டணம் ரூ.15- வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து வங்கி பிடித்தம் செய்துள்ளது.
                          முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள 68 லட்சம் வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து இந்தத் தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. முதலில் ஒவ்வொரு வாடிக்கையாளர் கணக்கிலிருந்தும் ரூ.15-ம், அதற்கு சேவை வரியாக ரூ.2-ம் என மொத்தம் ரூ.17 பிடித்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு சில வாடிக்கையாளர் கணக்கிலிருந்து ரூ.17 பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால், பின்னர் சேவை வரி வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதால், ரூ.15 மட்டும் பிடித்தம் செய்யப்படுகிறது. தங்களது கணக்கிலிருந்து ரூ.17 பிடித்தம் செய்யப்பட்டவர்களுக்கு, ரூ.2- அவர்களது கணக்குக்கே திரும்ப அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என பாரத ஸ்டேட் வங்கியின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

                         ஏற்கெனவே ஏடிஎம் கார்டுக்கு ஆண்டு பராமரிப்புக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.102 என்பது தொடரும் என்றும் அதிகாரிகள் கூறினர். ஓசையின்றி அமல்: பாரத ஸ்டேட் வங்கிக்கு நாடு முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. அவற்றில் கோடிக்கணக்கானோர் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளனர். இவர்களில் 75 சதவீதம் பேர் ஏடிஎம் கார்டு வைத்துள்ளனர். இவர்கள் அனைவரிடம் இருந்தும் ஒரு காலாண்டுக்கு ரூ.15 வீதம் ஓர் ஆண்டுக்கு ரூ.60- சேவைக் கட்டணமாக பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தங்களது கணக்கிலிருந்து ரூ.15 அல்லது ரூ.17 பிடித்தம் செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஊழியர்களுக்கு விலக்கு: பாரத ஸ்டேட் வங்கியின் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் இந்த சேவைக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment