Thursday 13 June 2013

உயர்நிலைப் பள்ளிகளில் தரம் உயரவில்லை: பிளஸ் 1 மாணவர்கள் தவிப்பு



           நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவது அதிகரித்துள்ள நிலையில், உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்வு இல்லாததால், பிளஸ்1 சேர்க்கையில் இடம் கிடைக்காமல்,
மாணவர்கள் தவிக்கின்றனர். கட்டாய கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்ட பின், அனைவருக்கும் கல்வி கற்பிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 5 கி.மீ., தூரத்திற்குள் ஒரு பள்ளி என்ற குறிக்கோளுடன், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் செயல்படுகிறது. முதலில் ஆரம்ப கல்வியில் கவனம் செலுத்திய, அனைவருக்கும் கல்வி இயக்கம், பத்தாண்டுகள் பின், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கமாக செயல்படுகிறது. இதுவும் பத்தாண்டுகள் நிறைவு பெற்ற பின், 2015-16ல் அனைவருக்கும் மேல்நிலைக்கல்வி துவக்கப்பட உள்ளது.
                                
ஆண்டு தோறும் மாணவர்கள் எண்ணிக்கைகேற்ப, பள்ளிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயவு அபரிமிதமாகவும், மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்வு குறைந்த அளவிலும், கடைபிடிக்கப்பட்டு வருதால், பிளஸ் 1 ல் மாணவர்கள் சேர்வது, மிகவும் கடினமாகிவருகிறது. இது, மாணவர்களை இடைநிற்றலுக்கு வழி வகுக்கிறது. தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில், உயர்நிலைப்பள்ளிகளாக ஆண்டுக்கு 100 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால் கடந்த ஆண்டில், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படவில்லை. 2013-14 க்கு மேல்நிலைப்பள்ளிகளாக 100, உயர்நிலைப்பள்ளிகளாக 50 தரம் உயர்த்தப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. பத்தாம் வகுப்பில் ஒவ்வொரு பள்ளியிலும் ஆறு முதல் எட்டு பிரிவுகளில் 400க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். மேல்நிலைக்கல்வி செல்லும் போது நான்கு பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
                        
இதில் ஒரு பாடப்பிரிவுக்கு 50 மாணவர்கள் என்றாலும், 200 மாணவர்கள் மேல்நிலைக்கல்வியில் இடம் கிடைக்கிறது. மீதமுள்ள மாணவர்கள், பிளஸ் 1 சேர முடியாமல் தவிக்கின்றனர். முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி ஒருவர் கூறுகையில், "பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்வது அதிகளவில் உள்ளது.உயர்நிலைப் பள்ளிகளில் தரம் உயர்வு இல்லாததால், மாணவர்கள் பாதிக்கின்றனர். நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் போது, அதே அளவு உயர்நிலைப்பள்ளிகளையும், தரம் உயர்த்த, அரசு முன் வர வேண்டும்" என்றார். அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், "2015-16 ல் அனைவருக்கும் மேல்நிலைக்கல்வி செயல்படுத்தப்படும். அப்போது தான் அதிக உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்" என்றார்
.

No comments:

Post a Comment