Thursday 13 June 2013

எத்தனை இடங்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வு?



                               தமிழகத்தில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,823 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மட்டும் முதல்கட்ட கலந்தாய்வை நடத்த மருத்துவக் கல்வி தேர்வுக் குழு
திட்டமிட்டுள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 19-ஆவது அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் கூடுதலாக 285 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி..) அனுமதி அளித்துள்ளது; எனினும் 285 கூடுதல் இடங்களுக்கான அனுமதியை மத்திய அரசு விரைவில் வழங்கும் நிலையில் மட்டுமே தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய மொத்தம் 2,065 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
                                  
கடந்த ஆண்டைக் காட்டிலும் (1,823 எம்.பி.பி.எஸ். இடங்கள்), இந்த ஆண்டு கூடுதலாக 285 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைப்பது உறுதி என்பதால், முதல் கட்ட கலந்தாய்வு தொடங்குவதற்குள் மத்திய அரசின் அனுமதி வராவிட்டாலும் மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். கூடுதல் 285 இடங்களுக்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் தொடர்ந்து கலந்தாய்வு நடத்தப்பட்டு மறு ஒதுக்கீடு முறை மூலம் (அதிக கட்-ஆஃப் பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் கல்லூரியைத் தேர்வு செய்யும் வாய்ப்பு) எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஆர்.ஜி.சுகுமார் தெரிவித்தார்.
                               
எனினும் முதல் கட்ட கலந்தாய்வு வரும் 19-ஆம் தேதி தொடங்குவதற்கு முன்பு கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு அனுமதியைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் அனுமதி கிடைத்து விட்டால், தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,065 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு உரிய கலந்தாய்வு அட்டவணை இன்னும் சில நாள்களில் வெளியிடப்படும் என்றும் டாக்டர் சுகுமார் கூறினார். சுயநிதி அரசு ஒதுக்கீட்டுக்கு கலந்தாய்வு எப்போது? முதல் கட்டமாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள 11 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்குக் கிடைக்கும் 838 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடத்துவது குறித்து விரைவில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
                        
சி.எம்.சி.-க்கு மட்டும் விதிவிலக்கா? தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் குறிப்பிட்ட சதவீத எம்.பி.பி.எஸ். இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்கும்போது, வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மட்டும் பல ஆண்டுகளாக அரசு ஒதுக்கீட்டுக்கு எம்.பி.பி.எஸ். இடங்களை அளிக்காமல் இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்; "இது தொடர்பாக வழக்கு உள்ளதால், வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்கள் கிடைப்பதில் பிரச்னை உள்ளது' என்று சுகாதாரத் துறைச் செயலர் ஜே.ராதாகிருஷ்ணன் கூறினார்
.

No comments:

Post a Comment