Thursday 6 June 2013

தேர்ச்சி விகித உயர்வுக்குத் தலைகுனியும் ஓர் அரசு பள்ளி ஆசிரியரின் கடிதம்

நான் ஒரு கிராமத்துப் பள்ளியில் தமிழாசிரியராக இருக்கிறேன். பத்தாம் வகுப்புக்குத் தமிழ் பயிற்றுவிக்கிறேன். பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான் இந்தப் பள்ளியில் பெரும்பான்மை. ஏழைகள் அல்லது கூலி வேலை
செய்து வாழ்ந்து வரும் குடும்பத்தின் மாணவர்கள் இவர்கள்.

கல்வியிலும் பொது அறிவிலும் மிகவும் பின்தங்கியவர்கள். வருகையின்மை அதிகம். சனி, ஞாயிறு இரண்டு நாட்களில் நடைபெறும் சிறப்பு வகுப்பிற்கு வராமல் தவிர்ப்பவர்கள்தான் இம்மாணவர்கள். ஏனெனில் ஏழ்மையில் வாழும் இக்குடும்ப மாணவர்கள், இந்த இரண்டு நாட்கள் செங்கல் சூளையிலும் வயல்களிலும் பணிபுரிந்து குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டிய துர்பாக்கியநிலை. இதை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் எல்லாப் பள்ளி ஆசிரியர்களும் உழைக்கிறார்கள். இவ்வளவு பின்னடைவு இருந்தும், அவர்களைத் தேர்ச்சி அடைய வைக்கவே ஆசிரியர்கள் பாடுபடுகிறார்கள்.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுக்காகக் காத்திருந்தேன். சமீப காலமாக, ஒரு பள்ளியின் தேர்ச்சி வீதத்தில், மாணவனின் பங்கைவிட, ஆசிரியர் பங்கு அதிகமாகிறது. ஒரு மாணவனின் தேர்ச்சியால், ஓர் ஆசிரியரின் தேர்ச்சி விழுக்காடு குறைந்தபட்சம் ஒரு சதவீதம் ஏறுகிறது. ஒருவேளை மாணவன் தோல்வி அடைந்தால்? இதை நான் சொல்லத் தேவையில்லை. மாணவர்களின் தோல்வி என்பது தனிப்பட்ட மாணவர்களுடையது (வெறும் சர்டிபிகேட் போதும்) என்பதைக் கடந்து, இப்பொழுது ஆசிரியருக்கான கௌரவக் குறைச்சலாகிவிட்டது.

இந்த வருடம், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில், தமிழகத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி விழுக்காடு, கடந்த ஆண்டைவிடக் குறையும் என்று எதிர்பார்த்தேன். அதற்கு இரண்டு காரணங்கள்.

1.
ஒன்பதாம் வகுப்பில் அனைவரும் கட்டாயத் தேர்ச்சி

2.
காலம் தாழ்த்தி வகுப்பினைத் தொடங்கியது.

இந்த இரண்டு காரணங்கள் ஆழமானவை என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது, கடந்த ஆண்டைவிட இந்த வருடம், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு விழுக்காடு அதிகரித்துள்ளது. இது முதல் அதிர்ச்சி. இது பொதுவான அதிர்ச்சிதான்.

அடுத்ததாக எனக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. இந்த அதிர்ச்சிக்கு சந்தோஷப்படத்தான் வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த அதிர்ச்சி என்னைக் கவலைப்பட வைத்தது. என்னிடம் பத்தாம் வகுப்புப் பயின்ற மாணவர்கள் சிலர் தமிழில் தேர்ச்சி அடைந்ததுவிட்டார்கள்.

பள்ளிக்கு அதிகம் வராமலும், வகுப்பிற்கு வந்தால் எந்தப் பாடநூலும் பாட ஏடும் கொண்டு வராமலும், சிறப்பு வகுப்புகளுக்கு வராமலும், தேர்வுக்கால சிறப்பு வகுப்பிற்கு வராமலும் இருந்த மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருப்பதை என்ன சொல்வது?

சரி... இவர்கள் கடைசி நேரத்தில் படித்திருக்கலாமே? என்று நீங்கள் உறுதியாக என்னைக் கேட்கலாம். காலாண்டு, அரையாண்டு, மீள்பார்வை தேர்வுக்கு அவ்வப்போது வராத மாணவர்கள்தான் இவர்கள். வீட்டிலிருந்து பள்ளிக்குப் புறப்பட்டு, பள்ளிக்குள் வராமல், ஆற்றங்கரையிலும் தென்னந்தோப்பிலும் இருந்துவிட்டுப் பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்குச்செல்பவர்கள் இவர்கள். அப்படி பள்ளிக்கு வந்தாலும் தொடர்ச்சியான வாசிப்பு இல்லாததால், இடையில் வந்து திணறி, இடையிலேயே நின்று விடுபவர்கள் இவர்கள்.

சென்ற ஆண்டைவிட இந்த வருடம், என்னுடைய தேர்ச்சி சதவீதம் குறையும் என்று நினைத்திருந்தேன். காலாண்டு, அரையாண்டு, மீள்பார்வைத் தேர்வுகள் 3, கடைசியாக மாதிரிப் பொதுத்தேர்வு ஆகியவற்றைக் கொண்டுதான், அரசு பொதுத்தேர்வில் என்னுடைய சதவீதம் கணிக்கப்படும். அப்படி கணித்ததில், என்னுடைய தேர்ச்சி 50% - 55% சதவீதம்தான் வரும் என்று எதிர்ப்பார்த்தேன். கடந்த ஆண்டு நான் கொடுத்த சதவீதம் 88% என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆனால் இந்த வருடம் எனக்கு வந்தது 72% சதவீதம்.

என்னால் இந்தப் பேரதிர்ச்சியைத் தாங்கமுடியவில்லை. எப்படி அவர்கள் தேர்ச்சி அடைந்தார்கள் என்பதே என் கேள்வி. அவர்கள் தோல்வி அடைந்திருக்கவேண்டும் என்பதற்குச் சில காரணங்கள் என்னிடம் இருக்கின்றன.

1.
தொடர்ச்சியாக வகுப்பிற்கு வராதது.

2.
கடைசி நேரத்தில் அரசியல்வாதிகள், பெரும்புள்ளிகள் (வெறும் சர்டிபிகேட்டிற்காக) பரிந்துரை மற்றும் குறைந்த வருகைப் பதிவேட்டைச் சரி செய்யும் மருத்துவச் சான்றிதழ் வழியாகப் பள்ளிக்குள் நுழைந்து தேர்வு எழுதுவது.

3.
சிறப்பு வகுப்புகளில் கலந்துகொள்ளாதது.

4.
ஆசிரியர்களும் அரசும் தந்திருக்கின்றன குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் கையேட்டைத் தொடர்ந்து பயிற்சி செய்யாதது.

5.
பாட ஆசிரியர்கள் தரும் அறிவுரைக் கலந்தாய்வைப் பின்பற்றாதது.

6.
தன் பிள்ளைகள் எப்படி படிக்கிறார்கள் என்று பெற்றோர் கவனம் செலுத்தாதது.

7.
ஆசிரியர்களிடம் தன் பிள்ளையின் கல்விநிலை குறித்து அடிக்கடி விசாரிக்காதது.

8.
கல்வி சட்டத்தின் அடிப்படையில் மாணவனைப் படிப்பிலும் ஓழுக்கதிலும் அதிகமும் ஆசிரியர்கள் வலியுறுத்தமுடியாதது.

இந்த காரணங்கள் மட்டும் இல்லாமல், ஒழுக்கத்தின் மீதும், படிப்பின்மீது அக்கறையற்ற இம்மாணவர்கள் தமிழில் எப்படி தேர்ச்சி அடைந்தார்கள்? என்பதுதான் என் கேள்வி.

இருநூறு நாட்கள் நடந்த பள்ளியில், அரைகுறையாக வந்து சென்று, அரைகுறையாக வாசித்து வந்த இந்த மாணவர்கள் எப்படி தேர்ச்சி அடைந்தார்கள் என்பதே என் கேள்வி.

இங்கு ஒன்றை ஆதாரமாகக் குறிப்பிடவிரும்புகிறேன். காலாண்டு தேர்வில் என் பாட சதவீதம் 30. அரையாண்டில் 40. கடைசியாக நடத்திய மாதிரி பொதுத்தேர்வில், பொதுத்தேர்வில் திருத்துவது போன்றே திருத்தி வந்த சதவீதம் 45% தான். இந்த முன்னேற்றத்தைக் கொண்டு, கடைசி நேரத்தில் வாசிப்பார்கள் என்று நினைத்து, நான் கணித்த என் பொதுத்தேர்வு சதவீதம் 50% - 55%. ஆனால், எனக்குப் பொதுத்தேர்வில் வந்த சதவீதம் 72%. எப்படி இவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டது என்பது இன்னும் இந்த அடியேனுக்கு விளங்கவில்லை.

இந்த தேர்ச்சியில் சந்தோஷத்துடன் திரியும் மாணவர்களின் புத்தகங்களும் கையேடுகளும், நான் தயாரித்துக்கொடுத்த (60 மதிப்பெண் பெற) வழிகாட்டியும் என்னிடத்திலும், தலைமையாசிரியர் அறையிலும் தூசு ஏறி இருக்கின்றன.

தன் புத்தகம் காணாமல் போய்விட்டதைப் பற்றிக் கவலைப்படாத மாணவன் இன்றைய மாநிலப் பொதுத்தேர்வில் தேர்ச்சி. எப்படி இது சாத்தியம்?

அரசாங்கம் ரிசல்ட் குறையக்கூடாது என்று நினைத்து கம்ப்யுட்டரில் புரொக்ராம் செய்துவிடுவார்கள் என்பது ஆசிரியர்களுக்கிடையேயான ரகசிய வதந்தி. இது உண்மையா? பொய்யா? என்று தெரியவில்லை. உண்மையாக இருந்தால் நாம் இதற்காக வெட்கப்படவேண்டும்.

இந்தப் பேரதிர்ச்சியில் அந்த மாணவன் சந்தோஷத்தில் தலை நிமிரலாம். தமிழ் ஆசிரியராகிய நான் கொஞ்சம் தலைகுனிகிறேன்.

-
பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர், தமிழ்நாட்டில் ஒரு கல்விமாவட்டம்

No comments:

Post a Comment