Saturday 15 June 2013

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியல் வெளியிடுவதில் கல்வித்துறை மெத்தனம் - நாளிதழ் செய்தி



               தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் பட்டியலை வெளியிடுவதில், கல்வித்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கால், மாணவர்கள் சேர்க்கை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் இந்தாண்டு 100 மேல்நிலை
பள்ளிகள், 50 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என, கல்வி துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்து, மாணவர்கள் சேர்க்கை துவங்கிய நிலையிலும், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் எவை என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை. இதனால், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், மேல்நிலை கல்விக்காக மாணவர்கள் "டி.சி." வாங்கிக் கொண்டு, வேறு பள்ளியில் சேரும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, பள்ளிகளில் கட்டமைப்பு வசதி, மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை அடிப்படையில், தரம் உயர்த்துவதற்கு பள்ளிகள் தேர்வு செய்யப்படும்.
                              
மேல்நிலை பள்ளிக்கு ரூ.2 லட்சமும், உயர்நிலை பள்ளிக்கு ரூ.1 லட்சமும் மக்கள் பங்களிப்பு தொகையாக, அரசு கருவூலத்தில் செலுத்தப்படும். இதுபோன்று விண்ணப்பித்த பள்ளிகள் தான் தற்போது தரம் உயர்த்தப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மாணவர்கள் சேர்க்கை துவங்கிய நிலையில், தங்கள் பகுதி பள்ளி தரம் உயர்த்தப்பட்டதா எனத் தெரியாமல் தவிக்கின்றனர். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பெயர் பட்டியல் விவரத்தை ஜூன் முதல் வாரத்திற்குள் கல்வி துறை அறிவித்தால் தான், மாணவர்கள் சேர்க்கை பாதிக்காமல் இருக்கும். ஆனால், முந்தைய காலங்களில் இதுபோன்ற தாமத அறிவிப்பாலும், அரசியல் தலையீட்டினாலும், தற்போது 50 மாணவர்களுக்கும் குறைவாக 100 உயர்நிலை பள்ளிகளும், 200க்கும் மேற்பட்ட மேல்நிலை பள்ளிகளும் செயல்படுகின்றன. இந்த நிலையை தவிர்க்க, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பெயர் பட்டியலை கல்வி துறை உடனடியாக அறிவிக்க வேண்டும், என பெற்றோர், ஆசிரியர் சங்கங்கள் நிர்வாகிகள், கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்
.

No comments:

Post a Comment