Tuesday 18 June 2013

அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்…சீனா சாதனை : அமெரிக்காவை முந்திய சீனா


                 அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், உலகின் வலிமையான நாடுகளில் ஒன்றாக மாறிவரும் சீனா, இப்போது தொழில்நுட்பத்திலும் வேகமான முன்னேற்றம் கண்டு வருகிறது. உலகின் அதிவேக சூப்பர்
கம்ப்யூட்டரை இப்போது சீனா உருவாக்கியுள்ளது.

டியானி 2 (Tianhe 2) : இது சீன விஞ்ஞானிகள் அண்மையில் உருவாக்கியுள்ள புதிய சூப்பர் கம்ப்யூட்டர். தமிழில், பால்வழி என்ற தரும் பொருள் தரும் பெயரைக் கொண்டுள்ள இந்த கம்ப்யூட்டரை, மத்திய சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள, தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக் கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன் வேகம், நொடிக்கு 33.86 பெடாஃப்லாப் (Petaflap). அதாவது, நொடிக்கு 33,860 லட்சம் கோடி கணக்குகளைச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தது என சொல்லலாம். மனிதனை விண்வெளிக்கு அனுப்புவது, சந்திரன் போன்ற மற்ற கிரகங்களை ஆய்வு செய்வது உள்ளிட்ட மிகப்பெரிய அளவிலான அறிவியல் திட்டங்களைச் செயல்படுத்த இந்த சூப்பர் கம்ப்யூட்டர் உதவும். இவற்றைக் கொண்டு, மிகக் கடினமான கணக்குகளை துல்லியமாக செய்து முடிக்கலாம். மிகப்பெரிய ஆய்வு திட்டங்கள் எதையும், சூப்பர் கம்ப்யூட்டர் இல்லாமல் செய்ய முடியாது.
                               
அமெரிக்க எரிசக்தி அமைச்சகத்தின் தயாரிப்பான, டைட்டன் என்ற கம்ப்யூட்டர்தான், இதுவரை உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டராக கருதப்பட்டு வந்தது. அந்த பெருமையை இப்போது சீனாவின் டியானி 2 தட்டிச் சென்றுள்ளது. இது அமெரிக்காவின் டைட்டன் சூப்பர் கம்ப்யூட்டரை விட, 2 மடங்கு திறன் மிகுந்தது. இதை உருவாக்க 600 கோடி ரூபாய் செலவானதாம். கணினி தொழில்நுட்பத்தில் சிறந்த விஞ்ஞானிகள் குழு, ஒவ்வொரு ஆண்டும் 2 முறை உலகின் அதிவேகமான 500 சூப்பர் கம்ப்யூட்டர்களை வரிசைப்படுத்தும். இதன்படி, அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் சீன கம்ப்யூட்டருக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் உருவாக்கும் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. தற்போதைய நிலையில், இந்தியாவின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரான பரம் யுவா 2, உலகளவில் 62-வது இடத்தையே பெற்றுள்ளது
.

No comments:

Post a Comment